மெட்ரோ ரயில் நிலையமா..? தற்கொலைக் களமா..?
தில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் முன் பாய்ந்தும், கட்டடத்தில் இருந்து குதித்தும் கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் மத்தியிலும் கவ


தில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் முன் பாய்ந்தும், கட்டடத்தில் இருந்து குதித்தும் கடந்த ஒரு வாரத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் மத்தியிலும் கவலையளிக்கும் விஷயமாகியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் 9 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 4 பேர்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதை விட ரயில் நிலையக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்கொலை செய்து கொண்டவர்களில் இளைஞர்களே அதிகம் என்பது கூடுதலாக கவலையளிக்கும் செய்தி.
22 வயது மாணவி
பிகார் மாநிலத்தில் இருந்து தில்லியில் தங்கி படித்து வந்த 22 வயது மாணவி மது, கடந்த மார்ச் மாதம் மாளவியா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
"எனது முடிவுக்கு எனது குடும்பத்தார் யாரும் காரணம் இல்லை' என்பது அவரது கடைசி கடிதத்தில் இருந்த வாசகம்.
கோவிந்த்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மொபைல் போனில் பேசியபடி வந்த அனில்குமார் (22) என்ற இளைஞர் திடீரென கீழே குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை நேரில் பார்த்திருக்கின்றனர். ஆனால், தடுக்க முடியவில்லை.
"இவ்வாறான சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை' என்று தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மெட்ரோவின் நடவடிக்கை
"தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைக் கண்டதும் அவர்களை உடனே காப்பாற்றுவதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் செய்தித் தொடர்பாளர் அனுஜ் தயாள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரைத் தடுக்க, முதல் கட்டமாக கஷ்மீரி கேட், ராஜீவ் சௌக், சென்ட்ரல் செக்ரடரியேட், சாந்தினி சௌக், சௌரி பஜார், புது தில்லி ஆகிய ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் கண்ணாடித் திரைக் கதவுகளை மெட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களை 3.5 மீட்டர் உயரத்தில் இருந்து 5 மீட்டராக உயர்த்தவும், பாதுகாவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி தரவும் மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தவும் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைவர் மங்கு சிங் உத்தரவிட்டுள்ளார்.
மன நல மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?
ஆர். கே. ருத்ரன்:
தற்கொலை மனோபாவம் வராமல் இருக்க சிறு வயதில் இருந்தே வாழ்வில் திட்டமிடல் அவசியம் என்பதை உணரச் செய்ய வேண்டும். மனித வாழ்வின் முக்கியத்துவம் குறித்து சிந்தித்தால் தற்கொலைகள் நடைபெறாது என்று மருத்துவர் ஆர்.கே. ருத்ரன் கூறினார்.
சி. ராமசுப்பிரமணியம்:
தற்கொலை செய்து கொள்பவர்களில் இளைஞர்களே அதிகம். மனசோர்வின் உச்சகட்ட வெளிப்பாடுதான் தற்கொலை. இன்றைய இளைஞர்களில் பலர், சிறு பிரச்னைகளைக் கூட தாங்க கூடிய மன உறுதியில் இல்லை.
தற்கொலைகளைத் தடுக்க, பொதுமக்கள் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்களை அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் ஆகியவற்றில் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். மனச்சோர்வு உள்ளவர்கள் உளவியல் நிபுணர்களை அணுகவேண்டும். தற்கொலைகள் தடுக்க கூடியவை என்று அனைவரும் புரிந்து கொண்டால் தற்கொலைகள் நிகழாது என்று சுட்டிக்காட்டினார் மருத்துவர் ராமசுப்பிரமணியம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...