நொய்டாவில் பி.பீ.ஓ. நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் அவரது வீட்டுக்கு அருகில் இறந்து கிடந்தார். அவர் காணாமல் போன மறுதினம் காலை இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
நொய்டா, சோத்பூர் காலனியைச் சேர்ந்த 21 வயதான அப்பெண், அப்பகுதி 65-வது செக்டாரில் உள்ள ஒரு பி.பீ.ஓ. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் வேலை செய்யும் 4 பெண் ஊழியர்களும் உடன் சென்றனர்.
சோத்பூர் காலனி வெளிப்பகுதியில் சக ஊழியர்கள் தங்களது வீடுகளுக்குப் பிரிந்து சென்றுவிட, இவர் மட்டும் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். ஆனால், அதன் பிறகு அவர் காணாமல் போனார். அவரைப் பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந் நிலையில், சனிக்கிழமை காலை புஷ்தா பகுதி அருகே உடலில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
""அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பிறகு கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரிய வரும்'' என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.