மும்பை மாநகராட்சிப் பள்ளிகள் பலவற்றில் 8-ஆம் வகுப்பு படிக்கும் வசதி இல்லாத காரணத்தால் அந்தப் பள்ளிகளில் படித்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பை கைவிட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
கன்ஷியாம் சோனார் என்ற அந்த நபர் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்குமாறு, மகாராஷ்டிர குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு, தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
புகார்தாரரான கன்ஷியாம் சோனா கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மும்பை மாநகராட்சியிடம் பெற்ற தகவலின்படி, மொத்தம் உள்ள 1,195 மாநகராட்சிப் பள்ளிகளில் 1,017-இல் 8-ஆம் வகுப்பு படிக்கும் வசதி இல்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் "ஆண்டு செயல் திட்டம் மற்றும் பட்ஜெட்' பிரிவின் கீழ், 2017-18 ஆண்டில் மும்பை மாநகராட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்புக்காக மொத்தம் 1,195 பள்ளிகள் உள்ளன. அதில் 167 பள்ளிகளில் 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை படிக்கும் வசதியும், 850 பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை படிக்கும் வசதியும் உள்ளன. ஆனால், 1,017 பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் வசதி இல்லை. இதனால், 2003-04 முதல் 2009-10 வரையிலான காலகட்டத்தில் 7-ஆம் வகுப்பு முடித்த சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இது, 6 முதல் 14 வயது வரையிலான சிறார்கள் 8-ஆம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற வேண்டும் என்ற "கல்வி உரிமைச் சட்டத்தை' மீறிய ஒன்றாகும் என்றார்.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி கல்விக் குழு தலைவர் சுபதா குடேகர் கூறுகையில், "மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. பல்வேறு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் வசதியை தற்போது தொடங்கி வருவதால், சூழ்நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








