பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தில்லி எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு முயற்சிக்கு மனோஜ் திவாரி எதிர்ப்பு

தில்லி எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தில்லி பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:00 pm

தில்லி எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தில்லி பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
 தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 400 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த 2015, டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது. இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து மத்திய அரசிடம் முறையிட தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் பேரவைக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.சர்மா, மஞ்ஜீந்தர் சிங் சிர்ஸா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 
 இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவிப்பதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊதியத்தை உயர்த்துவதற்கு தில்லி அரசு முன்வைத்துள்ள காரணங்கள் ஏற்புடையவை அல்ல. அவை நகைப்புக்குரியவை. சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது பணம் சம்பாதிக்கும் வழியல்ல. அது மக்களுக்காக பணியாற்ற கிடைத்த வரமாகும். மக்கள் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களால் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்ற வாதமும் ஏற்புடையதல்ல. ஏனெனில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அதிகளவு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவி நிரந்தரப் பதவி அல்ல என்பதை ஆம் ஆத்மியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
 மக்கள் பணியாற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மியினர் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்வத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தில்லி அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் மாநகராட்சிகள் தவித்து வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர். 
இதற்கிடையே, தில்லி பேரவைக் குழுவில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளியேறுவார்கள் என தில்லி பாஜக பொதுச் செயலர் குல்ஜீத் சிங் சாகல் திங்கள்கிழமை "தினமணி' செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறுகையில், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊதிய உயர்வு தொடர்பான முயற்சிகளுக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு பேரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள ஓ.பி.சர்மா, மஞ்ஜீந்தர் சிங் சிர்ஸா ஆகிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்குழுவில் இருந்து விலகுவர்' என்றார்.
தில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மஞ்ஜீந்தர் சிங் சிர்ஸா கூறுகையில், பேரவைக் குழு அமைக்கப்பட்ட தினத்தில் நான் சட்டப்பேரவையில் இல்லை. எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கலாம். ஆனால், அதற்கு முன்பாக பல மாதங்களாக துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் தன்னுடைய கடமையில் இருந்து ஆம்ஆத்மி அரசு தப்பிக்க முடியாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.