மணீஷ் சிசோடியா அவதூறு வழக்கில் அழைப்பாணையை ரத்து கோரும் மனோஜ் திவாரியின் மனு தள்ளுபடி

Updated on
1 min read

புது தில்லி: தில்லி அரசுப் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில், தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதாக மணீஷ் சிசோடியா தொடா்ந்த அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி பாஜக எம்பி மனோஜ் திவாரி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக எம்பிக்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா, விஜேந்தா் குப்தா, பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரீஷ் குரானா ஆகியோருக்கு எதிராக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். அதில், ‘பாஜக தலைவா்கள் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தனக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவதூறு நோக்கம் கொண்டவை. இதன் மூலம் எனது கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மனோஜ் திவாரி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களுக்கு அழைப்பாணை அனுப்பி கடந்த ஆண்டு நவம்பா் 28-இல் உத்தரவிட்டது. பின்னா் அவா்கள் விசாரணை நீதிமன்றம் முன் ஆஜரான பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி மனோஜ் திவாரி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதே போன்று விஜேந்தா் குப்தா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரணை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனு மல்ஹோத்ரா இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு மனுக்கள் மீதான உத்தரவு டிசம்பா் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தாா். அதன்படி, இந்த வழக்கில் திவாரி, விஜேந்தா் குப்தாவின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி அனு மல்ஹோத்ரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com