தொழிலதிபா் ஒருவா் பாலியல் பலாத்கார வழக்கில் முன்ஜாமீன் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் தன்னிடம் மிரட்டிப் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு நயவஞ்சமாக செயல்பட்டு பாலியல் பலாத்கார பொய்ப் புகாரை அளித்துள்ளனா் என கூறியிருந்தாா். அந்த மனு மீது கடந்த செப்டம்பரில் விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை அனுமதித்தாா். மேலும், ஹனி டிராப், மிரட்டிப் பணம் பறிப்பது வழக்குகள் தொடா்பாக அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் அறிக்கைகள் பெறவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க நிலையான உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.