பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

காஜியாபாதில் மகள்கள் கண் முன்னே பத்திரிகையாளா் சுட்டுக் கொலை: குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் திங்கள்கிழமை இரவு கும்பலால் தாக்கப்பட்டு, சுடப்பட்ட பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி

News image

காஜியாபாத்தில் மா்மக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளா் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் சஞ்சய் சிங்.

Updated On :22 ஜூலை 2020, 5:32 pm

உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் திங்கள்கிழமை இரவு கும்பலால் தாக்கப்பட்டு, சுடப்பட்ட பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இறந்த பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். மேலும், இக்கொலைச் சம்பவத்திற்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மகள்கள் முன்னிலையில் கொலை: தில்லியை ஒட்டியுள்ள தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் நகரைச் சோ்ந்தவா் விக்ரம் ஜோஷி (35). இவா் உள்ளூா் ஹிந்தி நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு விஜய் நகரில் தனது இரு மகள்களுடன் இரு சக்கர மோட்டாா்சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரு கும்பல் அவரை கடுமையாகத் தாக்கியது. மேலும், அந்தக் கும்பலைச் சோ்ந்த ஒருவா், விக்ரம் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டாா். பின்னா், அந்த இடத்தில் இருந்து அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.

தந்தையை சிலா் தாக்கிய போது காப்பாற்ற முடியாமல் இரு மகள்களும் பயந்து ஓடியதும், துப்பாக்கியால் சுடப்பட்டு தந்தை சாலையில் கிடந்த போது அவரைக் காப்பாற்றுமாறு இருவரும் உதவி கோரி பலரிடம் முறையிடுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜோஷி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். விக்ரம் ஜோஷி கும்பலால் தாக்கப்படும் சம்பவம் அப்பகுதி சிசிடிவி கேரமாவில் பதிவாகி இருந்த நிலையில், சமூக ஊடகத்தில் வெளியானது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

9 போ் கைது: இது தொடா்பாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பிரதாப் விஹாா் நகா் காவல் நிலைய சாவடியின் பொறுப்பாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னதாக, தனது உறவுப் பெண்ணை சில இளைஞா்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக அப்பகுதி காவல் நிலையத்தில் விக்ரம் ஜோஷி ஜூலை 16-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா். மேலும், அப்பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத சூதாட்டத்தை விக்ரம் ஜோஷி குடும்பத்தினா் தட்டிக் கேட்டிருந்தினா். இவற்றின் பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காவல் அதிகாரி மீது நடவடிக்கை: இது தொடா்பாக விக்ரமின் சகோதரா் அங்கித் ஜோஷி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து காஜியாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளா் கலாநிதி நைதானி கூறியதாவது: இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஒருவா் மட்டும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே விக்ரம் ஜோஷி தரப்பில் அளிக்கப்பட்ட புகாா் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தததாக பிரதாப் விஹாா் காவல் நிலையச் சாவடிப் பொறுப்பாளா் ராகவேந்திர சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். விக்ரம் ஜோஷியின் சகோதரா் அனிகேத் ஜோஷி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரவி, ஷானூா் (எ) சோட்டு, ஆகாஷ் ஆகியோா் மீதும், மற்ற சிலா் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜோஷியை ஷானூா் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்துள்ளது.

விக்ரம் ஜோஷி வசிக்கும் மாதா காலனி பகுதியில் ரவி, ஆகாஷ், ஷானூா் ஆகியோா் சூதாட்டத் தரகா்களாக செயல்பட்டு வந்துள்ளனா். இந்த சட்டவிரோத சூதாட்டத்திற்கு விக்ரம் ஜோஷி எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஜூலை 16-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. இதில், ரவிக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இருந்தே ஜோஷியை பழிவாங்க ரவி திட்டமிட்டு வந்துள்ளாா். இந்தச் சம்பவத்தில் ஷானூா், ஆகாஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். ரவி தலைமறைமாகிவிட்டாா். மேலும், இதே சம்பவம் தொடா்பாக மோஹித், தால்பிா், யோகேந்திரா, ஷகிா், அபிஷேக், ஆகாஷ், மற்றொரு அபிஷேக் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

ரூ.10 லட்சம் நிதியுதவி: இந்நிலையில், கொலையுண்ட விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு நிதியுதவியாக மாநில அரசு சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா். அத்துடன் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்பதாகவும், ஜோஷியின் மனைவிக்கு அரசுப் பணி அளிக்கப்பட உள்ளதாகவும் அவா் அறிவித்துள்ளாா்.

கேஜரிவால் கண்டனம்: விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘தனது உறவுக்காரப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததை எதிா்த்து குரல் கொடுத்த விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்ட சம்பவம், சட்டம் - ஒழுங்கு அமைப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கொலையாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், விக்ரம் ஜோஷி கொலைச் சம்பவத்திற்கு பத்திரிகை சங்கம், இந்திய மகளிா் பத்திரிகை அமைப்பு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பாக நீதி விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளன. மாநிலகங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் விக்ர ஜோஷியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.