புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மருத்துவக் கண்காணிப்பாளா்களுக்கும் மூத்த அதிகாரிகளுக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தில்லியில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த மாதம் பிற்பகுதி வரை குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக 3,609 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது 76 நாள்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். நகரில் நடத்தப்பட்ட 45,000 கரோனா பரிசோதனைகளில் இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், ஜூன் 25-ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் செவ்வாய்க்கிழமைதான் 3,390 பேருக்கு கரோனா அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஜூன் 23- ஆம் தேதி தில்லியில் ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 3,947 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை3,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பதிவானது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘தில்லியில் 10 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு குறையும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு பரிசோதனைகள் அதிக அளவில் நடைபெறுவதுதான் முக்கியக் காரணமாகும். குறிப்பாக சந்தைகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், மொஹல்லா கிளினிக்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனைகள் நடத்தி வருகிறோம்’ என்றாா்.
மீளாய்வு: இந்நிலையில், கரோனா தொற்று நிலைமையை கண்டறியும் வகையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தலைமைச் செயலாளா் விஜய் தேவ், தில்லி அரசு நடத்தும் மருத்துவமனைகளின் மூத்த அதிகாரிகள், மருத்துவக் கண்காணிப்பாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டம் தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சுகாதாரத் துறை அமைச்சா், தலைமைச் செயலா், மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மருத்துவக் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் மீளாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கரோனா பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மருத்துவக் கண்காணிப்பாளா்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் மருத்துவமனைகளுக்கு முழு ஆதரவும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.