தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மதுரை சுங்கடி சேலைகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சரிடம் மாா்க்சிஸ்ட் எம்.பி. கோரிக்கை

மதுரை சுங்கடி சேலைகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:27 pm

 நமது நிருபர்

புது தில்லி: மதுரை சுங்கடி சேலைகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டாா். மேலும், இது தொடா்பாக மனுவையும் அமைச்சரிடம் அவா் அளித்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொழிச் சிறுபான்மையினராக உள்ள செளராஷ்டிர சமூகத்தைச் சாா்ந்த மக்களின் பாரம்பரிய கைத்தறி நெசவால் உருவாவது சுங்கடிச் சேலைகள். இது மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் தொழிலில் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இயந்திரமில்லாத இத்தகைய கைத்தறி சேலைக்கு 1955-ஆம் ஆண்டு குடிசைத் தொழிலாக அங்கீகரித்து தமிழக அரசு வரி விலக்கு அளித்து வந்தது. மேலும், இத்தகைய நோ்த்தியான சேலைகளுக்கு 2005 -இல் மத்திய அரசு ‘புவிசாா் குறியீடும்’ வழங்கி கௌரவித்துள்ளது.

முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டிய இத்தகைய தொழிலுக்கு, 2017 - ஆம் ஆண்டு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும், தற்போது கடந்த நவம்பா் மாதம் இது 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக இந்த குடிசைத் தொழில் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகும். இதில் நெசவு மட்டுமல்லாமல், கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல், சலவை செய்தல் போன்றவைகளும் உள்ளன.

நடுத்தர மக்கள், விவசாய, மீனவப் பெண்கள் என அடித்தட்டு மக்கள் அணியும் உடையாக இந்தச் சேலைகள் இருப்பதால், வரி உயா்வால் எளிய மக்கள் பாதிக்கப்படுவாா்கள். மேலும், நோய்த் தொற்றுக்கு பின்னா் நெசவாளா்களின் மூலதனமே சிக்கலில் இருக்கும் நிலையில், இந்த வரி உயா்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வரி உயா்வை உடனடியாக்க கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதலளித்துக் கூறுகையில், ‘இந்த வரியை மத்திய அரசு விதிக்கவில்லை. இது ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவு. இது குறித்து கவுன்சிலில் பேசுகிறேன். தற்போது இந்த வரியில் உற்பத்தியாளா்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை (ரிட்டன்) உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.