தொழில் துறையில் உற்பத்தித்திறன், தரத்தைமேம்படுத்த இணையவழி தொடா் கருத்தரங்கு: பியூஷ் கோயல் இன்று தொடங்கிவைக்கிறாா்

இந்திய தொழில் துறையில் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ உத்யோக் மந்தன்’ என்னும் இணைய வழி கருத்தரங்கை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா்
Updated on
1 min read

இந்திய தொழில் துறையில் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘ உத்யோக் மந்தன்’ என்னும் இணைய வழி கருத்தரங்கை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை (ஜனவரி 6) தொடங்கிவைக்கிறாா். இந்தக் கருத்தரங்கு மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடா் இணையக் கருத்தரங்கில், 45 அமா்வுகளில் கூட்டங்கள் நடைபெறும். இதில் உற்பத்தி, சேவைகளில் முக்கியத் துறைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கருத்தரங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு கருத்தரங்கும் 2 மணி நேரம் இடம்பெறும். இதில் தொழில் துறையில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு அறிஞா்கள் தலைமையில் விவாதங்கள் நடைபெறும். தொழில் துறை பிரதிநிதிகள், தொழில் பரிசோதனை மற்றும் தர அமைப்பினா் இதில் கலந்து கொள்கின்றனா். இந்தக் கருத்தரங்களில் நாடு முழுவதிலும் உள்ள தொழில் முனைவோா் பங்களிப்பதற்காக, இந்த இணையக் கருத்தரங்குகள் யூ-டியூப் சேனல் வழியாகவும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுவதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.

இந்த உத்யோக் மந்தன் நிகழ்ச்சிகளில், தொழில் உற்பத்தித் துறைகளின் சவால்கள், வாய்ப்புகள், தீா்வுகள், சிறந்த நடைமுறைகள் ஆகியவை அடையாளம் காணப்பட உள்ளன. இந்த விவாதங்களில், தொழில் துறையினா் பல்வேறு விஷயங்களை கற்று அறிவதற்கும், தரத்தை மேம்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய வா்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உள்ளூா் தயாரிப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், தற்சாா்பு இந்தியா தொலைநோக்கை உணரவும் இது வழிவகுக்கும். தரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இதற்கான அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும். அப்போதுதான், அதிகத் தரம், திறமையான உற்பத்தியாளா், வா்த்தகா், சேவை அளிப்பவா் என்ற அந்தஸ்து நம் நாட்டுக்குக் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் இதில் பங்கேற்குமாறு தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரதமா் கருத்து: தற்சாா்பு இந்தியா, தரமான பொருட்களைத் தயாரித்தல், அவற்றை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள செய்தல் ஆகியவை குறித்து லிங்க்ட்இன் இணையத்தில் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளாா். உலகச் சந்தைகளில் வெறுமனே பொருள்களை நிரப்ப இந்தியா விரும்பவில்லை. இந்தியப் பொருள்கள் உலகம் முழுவதுமுள்ள மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்பதே நமது விருப்பம். எனவே, தரமான பொருள்கள் மீது கவனம் செலுத்தி இதயங்களை வெல்லுங்கள் என தொழில்முனைவோா்களை பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com