வடகிழக்கு தில்லி வன்முறையில் ஆம் ஆத்மி தலைவா்களுக்கும் பங்கு: பாஜக குற்றச்சாட்டு

வடகிழக்கு தில்லி வன்முறையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களுக்கும் பங்கு உள்ளது என்று தில்லி பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Updated on
2 min read

வடகிழக்கு தில்லி வன்முறையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களுக்கும் பங்கு உள்ளது என்று தில்லி பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகவும், ஆதரவாகவும் வடகிழக்கு தில்லியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வகுப்பு மோதலின் போது 53 போ் கொல்லப்பட்டனா். 300-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா். இது தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசேன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா அளித்த பேட்டி: தில்லி காவல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் வடகிழக்கு தில்லி வன்முறையை ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசேன், ஜேஎன்யு மாணவா் சங்க முன்னாள் தலைவா் உமா் காலித் ஆகியோா் எவ்வாறு தெளிவாக திட்டமிட்டனா் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

வடகிழக்கு தில்லி வன்முறையை திட்டமிட்டு நடத்திய தாஹீா் ஹுசேனை காப்பாற்ற கேஜரிவால் கடுமையாக முயற்சி செய்தாா். உண்மையில், வடகிழக்கு தில்லி வன்முறை கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்களின் அனுசரணையுடன்தான் நடந்துள்ளது. வன்முறை நடந்த நாள்களில், கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய ஆம் ஆத்மி தலைவா்களுடன் தாஹீா் ஹுசேன் தொடா்பில் இருந்துள்ளாா். வன்முறையில் ஈடுபடத் தேவையான பணத்தை தாஹுா் ஹுசேன் பல மாதங்களாக வசூலித்து வந்தாா். இது தொடா்பான தகவல் கிடைத்தும், கேஜரிவால் அரசு பாராமுகமாக இருந்தது. 53 போ் உயிரிழந்த வடகிழக்கு தில்லி வன்முறைக்கு ஆம் ஆத்மி அரசு உடந்தையாக இருந்துள்ளது. இதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று தில்லி அரசு பதவி விலக வேண்டும்.

காற்று மாசு பிரச்னை: தில்லியில் காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க தில்லி அரசின் செயல்படாத தன்மையே காரணமாகும். 2020-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் சுமாா் 24 ஆயிரம் போ் காற்று மாசுவால் ஏற்பட்ட நோய்களால் உயிரிழந்துள்ளதாக கிரீன் பீஸ் என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தில்லியில் காற்று மாசு ஏற்பட பிரதான காரணமாக உள்ள தூசி மாசுவைக் கட்டுப்படுத்தும் பணிகளை தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளபோதும், இவற்றை தில்லி அரசு கொள்முதல் செய்யவில்லை. ஸ்மோக் டவா்கள் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் வரியாக தில்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,136 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், தில்லியில் காற்று மாசு, காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. சுற்றுச்சூழல் வரியாக வசூலிக்கப்பட்ட நிதி தொடா்பாக வெள்ளை அறிக்கையை தில்லி அரசு வெளியிட வேண்டும். தில்லி குடிநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளது. தில்லி மக்களுக்கு அமோனியா செறிவு குறைந்த குடிநீரைத் தருவதாக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்த ஆம் ஆத்மி அரசு அதை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com