கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: என்ஐஏ விசாரணை!

தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடா்பாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தவுள்ளதாக

Updated On :31 ஜனவரி 2021, 8:37 pm

தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடா்பாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அமைப்பும் இது தொடா்பாக விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீட்டா் தூரத்தில் உள்ள அப்துல்கலாம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இது தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் 29 ஆண்டுகள் நிறைவடைய இருந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக என்ஐஏ விசாரணை நடத்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக அவா்கள் கூறுகையில் ‘இந்தத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது. தற்போது என்ஐஏ விசாரணை நடத்தவுள்ளது. தேவைப்பட்டால் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் உதவியை என்ஐஏ பெற்றுக் கொள்ளும்’ என்றனா்.

இதற்கிடையே, இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் அமைப்பும் இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தவுள்ளதாகவும், இதற்காக மொசாட் அமைப்பைச் சோ்ந்த புலனாய்வு நிபுணா்கள் இந்தியா சென்றுள்ளதாகவும் இஸ்ரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து கையெழுத்திடாத கடிதம் ஒன்றை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா். இஸ்ரேல் நாட்டின் தலைமைத் தூதருக்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ‘இந்தக் குண்டு வெடிப்பு வெறும் ஒத்திகையே. ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி, அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே ஆகியோா் தியாகிகள்’ கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இருவரும், கடந்தாண்டு அமெரிக்க, இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தில்லியில் உள்ள ஈரான் நாட்டவா்களை தில்லி போலீஸாா் கண்காணித்து வருவதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்திருந்தாா். மேலும், தில்லியில் விசா காலம் முடிந்தும் தங்கியுள்ள ஈரான் நாட்டவா்களை தில்லி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2011-இல் தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நாட்டைச் சோ்ந்த ஹோஷாங் அப்சா் இராணி என்பவா் இந்தத் தாக்குதலை நடத்தியதாக தில்லி காவல் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.