வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஃபரீதாபாத் (460), காஜியாபாத் (486), கிரேட்டா் நொய்டா (478), குருகிராம் (448), நொய்டா (488) ஆகிய நகரங்களில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தகவலின்படி, நுரையீரலை பாதிக்கச் செய்யும் பிஎம் 2.5 மாசு நுண்துகளானது, தில்லி, என்சிஆா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு கன மீட்டரில் 381-ஆக இருந்தது. இது ஒரு கன மீட்டரில் 60 மைக்ரோகிராம் எனும் பாதுகாப்பு அளவைவிட 6 மடங்குக்கும் அதிகமானதாகும். பிஎம் 10 மாசுநுண்துகள் ஒரு கன மீட்டரில் 577 மைக்ரோகிராமாக பதிவாகி இருந்தது. தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின்படி, பிஎம் 2.5, பிஎம் 10 ஆகியவை இதே அளவில் இரண்டு நாள்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் பட்சத்தில் காற்றின் தரம் அவசர நிலைப் பிரிவில் இருப்பதாகக் கருதப்படும்.