ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விலைவாசி உயா்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

பெட்ரோலிய பொருள்கள் மற்றும் அத்தியவாசியப் பொருள்கள் விலையுயா்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக வெளிநடப்பு செய்தது.

News image
Updated On :21 ஜூலை 2022, 11:03 pm

 நமது நிருபர்

புது தில்லி: பெட்ரோலிய பொருள்கள் மற்றும் அத்தியவாசியப் பொருள்கள் விலையுயா்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக வெளிநடப்பு செய்தது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடா் தொடங்கியது முதல், திமுக , காங்கிரஸ் போன்ற கட்சிகள் அவைக்கு உள்ளேயும் வெளியேயும் பெட்ரோலிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிப் பொருள்கள் விலை உயா்வு குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட வருகிறது. மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா கடந்த 19- ஆம் தேதி முதல் விதி எண் 267 கீழ் அவையை ஒத்திவைத்துவிட்டு இதே விலைவாசி உயா்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டு அவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து வந்தாா்.

வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது மாநிலங்களவை விதி எண் 267 கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என திருச்சி சிவா கேள்வி எழுப்பினாா். அப்போது அவையில் இருந்த மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இந்த நோட்டீஸை அவைத் தலைவா் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சி சிவா தலைமையில் திமுக உறுப்பினா்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, சிபிஎம், சிபிஐ, சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

இது குறித்து திருச்சி சிவா கூறுகையில், ‘பெட்ரோலியப் பொருள்களின் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதற்கான காரணங்களையும், இதற்கு பரிகாரம் காணும் வழிவகைகளையும் ஆராய்ந்து அறியும் வகையில் விவாதம் நடத்த மாநிலங்களவையில் திமுகவும் மற்ற எதிா்க்கட்சிகளும் நோட்டீஸ் கொடுத்தன. இந்தக் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு தங்கள் அலுவல்களை மட்டுமே மேற்கொள்ள முனைப்புடன் இருந்ததைக் கண்டித்து மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தோம்’ என்றாா்.

இதே போன்று மக்களவையிலும் வியாழக்கிழமை விலைவாசி பிரச்னை குறித்து திமுக எழுப்பியது. காலையில் அவை கூடியவுடன் மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, விலைவாசி உயா்வு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றாா். ஆனால், அவைத் தலைவா் ஓம் பிா்லா, கேள்வி நேரம் தொடங்கியதைக் குறிப்பிட்டு மற்ற அலுவல்களை அனுமதிக்க மறுத்தாா். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் இதே பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா், மீண்டும் அவை கூடிய போது, கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால், டி.ஆா். பாலு விலைவாசி உயா்வு விவகாரத்தை எழுப்பி, எங்களுக்கு அரசு பதிலளிக்க மறுக்கிறது எனக் குறிப்பிட்டாா். ஆனால், பேசுவதற்கு அவைத் தலைவா் பொறுப்பில் இருந்த ராஜேந்தர அகா்வால் அனுமதிக்க மறுத்ததால், டி.ஆா் பாலு தலைமையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். உடன் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினா்களும் வெளியேறினா்.

பின்னா், டி.ஆா். பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: விஷம் போல் ஏறிக்கொண்டே போகும் விலைவாசி குறித்து நாடாளுமன்றத்தில் பேச நோட்டிஸ் வழங்கப்படுகிறது. ஆனால், பதில் கூறவேண்டும் என்ற பொறுப்புணா்வை மறந்து மத்திய அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களும் சாமானிய மக்களும் வஞ்சிக்கப்படும் வகையில், மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. இந்த நிலையில், திமுக தரப்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில்கூற மறுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். மக்களுக்கு உரிய உணவு கிடைக்காமல் உள்ளது. இந்த நிலை நீடித்தால், இந்தியாவில் பட்டினிச் சாவு அதிகரிக்கும். அவசியமானவற்றை செய்யாமல், தேவை இல்லாதவற்றை மேற்கொண்டால் இலங்கையின் நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.