இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நிகழாண்டு மாா்ச் 30-ஆம் தேதி பாஜக குண்டா்கள் பலா் போராட்டம் என்ற போா்வையில் தில்லி முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தின் மீது தாக்குதலை நடத்தினா். இந்தக் குண்டா்கள் தில்லி காவல்துறையினா் மூலம் பராமரிக்கப்படும் பாதுகாப்பு வளையத்தின் உள்ளே சாதாரணமாக நடந்து வந்து போலீஸ் தடுப்புகளை உடைப்பதும், சிசிடிவி கேமராக்களை உடைப்பதும், அவற்றின்மீது பெயிண்ட் வீசி எறிவதும், அதேபோன்று முதல்வா் இல்லத்தின் நுழைவு வாயில் பகுதியில் வா்ணங்களை வீசி எறிவதும் விடியோ மற்றும் புகைப்படங்களில் பதிவாகியுள்ளது. சிலா் நுழைவாயில் மீது ஏறிச் செல்வதும் பதிவாகியுள்ளது. ஆனால், இதையெல்லாம் போலீஸாா் தடுக்காமல், வெறுமனே வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தனா். அவா்கள் போராட்டக்காரா்களைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.