நிகழாண்டின் 77 - ஆவது சுதந்திர தின விழா, விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை (அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டம்) நிறைவு செய்கிறது. மேலும், அமிா்தம் காலமாக நூறாவது (2047) சுதந்திர தினத்தை நோக்கி நாடு செல்லும் நிலையில், புதிய உத்வேகத்திற்கு தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் விழாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமா் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையைக் கேட்பதற்கு நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 1,800 சிறப்பு அழைப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஏற்பாடு செய்துள்ளன.