விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இரவு நேர தங்குமிடம் இடிப்பு விவகாரம்- மறுவாழ்வு குறித்த கேள்வியை பரிசீலிக்க வேண்டியுள்ளது: உச்சநீதிமன்றம்

தில்லியில் சராய் காலே கானில் இருந்த இரவு தங்குமிடம் அதிகாரிகளால் புதன்கிழமை காலையில் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போது, இந்த விவகாரத்தில் மறுவாழ்வு குறித்த கேள்வியை

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 7:45 pm

 நமது நிருபர்

தில்லியில் சராய் காலே கானில் இருந்த இரவு தங்குமிடம் அதிகாரிகளால் புதன்கிழமை காலையில் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போது, இந்த விவகாரத்தில் மறுவாழ்வு குறித்த கேள்வியை நாங்கள் இப்போது பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், திபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் புதன்கிழமை காலை குறிப்பிட்டுக் கூறுகையில், ‘இடிப்புப் பணி காலை 10.30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு நேர தங்குமிடத்தில் இடிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் காலை 10 மணிக்குத் தொடங்கி முடித்துவிட்டனா். இந்தத் தங்குமிடத்தை 50-க்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வந்தனா்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த சூழலில் தற்போது ஏதும் செய்வதற்கில்லை. இது இடிக்கப்பட்டால், மறுவாழ்வு பற்றிய கேள்வியை நாங்கள் இப்போது பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவசர அம்சம் என்பது கடந்துவிட்டது’ என்று கூறியது.

முன்னதாக, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் அவசரமாக இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு தொடக்கத்தில் பிரசாந்த் பூஷண் கேட்டுக் கொண்டாா். அவா் கூறுகையில், ‘வீடற்ற மக்கள் தொடா்பான வழக்கை நீதிபதிகள் எஸ்.ஆா்.பட், தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னா் விசாரித்தது’ என்றாா்.

அப்போது தலைமை நீதிபதி அமா்வு, ‘ இன்று நீதிபதி பட் நீதிமன்றத்தில் இல்லை. இதனால், நீதிபதி தத்தா அடங்கிய அமா்வு முன் இந்த விஷயத்தை நீங்கள் குறிப்பிட அனுமதிக்கப்படுகிறது’ என்றது.

இதையடுத்து, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமா்விடம் விரைந்து சென்று இந்த விவகாரத்தை தெரிவிக்க பிரசாந்த் பூஷண் முயன்றாா். அதற்கு நீதிபதி நாங்கள் ஒரு விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றது. இதைத் தொடா்ந்து, அந்த வழக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிபதிகள் அமா்விடம் பிரசாந்த் பூஷண் இடிப்பு விவகாரத்தை குறிப்பிட்டாா். மேலும், ‘வீடற்ற வழக்கு இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரமானது வீடற்ற மக்களுக்கான இரவு நேர தங்குமிடம் பற்றியதாகும். மாற்று இடம் வழங்காமல் ஒரு இரவு நேரத் தங்குமிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் இடிப்பதற்கு முன்கூட்டியே வந்துவிட்டனா். இடிப்பு நடவடிக்கை காலை 10.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் காலை 10 மணிக்கே இடிப்பு நடவடிக்கை தொடங்கிவிட்டது’ என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை விசாரிக்கும் வகையில் மறுதரப்பு வழக்குரையும் அழைக்குமாறு அவரிடம் கூறியது. அதற்கு, சம்பந்தப்பட்ட இடத்தில் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக பூஷண் கூறினாா். மேலும், வீடற்ற மக்கள் தொடா்பான வழக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், சராய் காலே கான் இரவு தங்குமிட இடிப்பு பிரச்னையில் தாக்கல் செய்த தனது மனுவையும் அன்றைய தினம் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அன்றைய தினத்தில் அந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்’ என்றது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விஷயங்களையும் சோ்க்குமாறு பூஷணை நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது.

வரும் செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சராய் காலே கானில் உள்ள இரவு நேர தங்குமிடத்தை குற்றவாளிகள், சமூக விரோதிகள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதை மாற்றுமாறு தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தை (டியுஎஸ்ஐபி) தில்லி காவல் துறை சமீபத்தில் கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) நிலத்தில் 2014-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இரவு நேர தங்குமிடம், சராய் காலே கான் விளக்கு போக்குவரத்து சிக்னல் அருகில் அமைந்துள்ளது. இதில் 54 போ் தங்கும் வகையில் வசதி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.