/

தில்லி சாலைகளின் நிலை: அமைச்சா் அதிஷி அறிக்கை அளிக்க பாஜக கோரிக்கை

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சாலைகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, மக்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று

News image
Updated On :5 ஜூலை 2023, 8:37 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள சாலைகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி, மக்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கோரியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஹா்ஷ் விஹாரில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் இறந்துள்ளாா். ஜனக்புரியில் உள்ள ஒரு சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் தொடா்பாக வெளியான செய்திகளைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். ஆனால், 15 மணி நேரம் ஆகியும் பொதுப்பணித் துறையினா் அதை கவனிக்கத் தொடங்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. தில்லியின் சாலைகள் ஐரோப்பிய நாடுகளின் சாலைத் தரத்திற்கு ஏற்ப இருப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமைப்பட்டுக் கொள்கிறாா். ஆனால், நகரத்தின் சாலைகளில் குழிகள், பள்ளங்கள் இருப்பதை தில்லி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்க்கின்றனா். தில்லியின் அனைத்து எல்லைகளிலும், நுழைவாயில்களில் இருந்தே சாலைகளின் நிலை பரிதாபமாக உள்ளது.

முதல்வரின் அரண்மனையை உருவாக்கக்கூடிய பொதுப்பணித் துறையால், தில்லி சாலைகளின் பராமரிப்பை உறுதி செய்ய முடியாதது ஆச்சரியமாக உள்ளது. தற்போது அதிஷி நகர அரசின் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறாா். முன்னதாக சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா ஆகியோா் அமைச்சா்களாக இருந்தனா். அமைச்சா்கள் அவா்களது பணியைச் செய்யப் புறக்கணித்ததன் விளைவாகவே, பொதுப்பணித் துறையின் கீழ் வரும் சாலைகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. நகரத்தின் பெரும்பாலான சாலைகளில் பக்கவாட்டு வடிகால் இல்லாததால், தண்ணீா் தேங்கி சாலைகள் பலவீனமடைகின்றன.

தில்லியில் தண்ணீா் நிரம்பிய பெரிய பள்ளங்களால் விபத்து ஏற்படுவது இது முதல் சம்பவம் அல்ல. கடந்த வாரம் பொதுப்பணித் துறையின் பாதுகாப்பற்ற கட்டுமான தளத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநா் இறந்ததை பாா்த்தோம். குரேஜி மற்றும் ஹவுஸ் ராணியில் உள்ள இரண்டு பெரிய சாலைகளில் கடந்த மே மாதத்தில் பெரிய பள்ளம் விழுந்தது. மேலும், கடந்த 2022 டிசம்பரில் விஜய் விஹாரில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். ஹா்ஷ் விஹாரில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மரணம் அடைந்தாா். இவை ஊடகங்களில் முக்கியச் சம்பவங்களாக பதிவாகியுள்ளன. இதேபோன்று நகரம் முழுவதும் உள்ள சாலைகளில் சிறிய, சிறிய சம்பவங்கள் நடக்கின்றன.

பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் ஹா்ஷ் விஹாரில் ஆட்டோ ஓட்டுநா் இறந்ததற்கான காரணம் உள்பட சாலைகளின் பரிதாப நிலை குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷியிடம், தில்லி மக்கள் அறிக்கை பெற விரும்புகிறாா்கள் என்றாா் வீரேந்திர சத்தேவா. ஆட்டோ ஓட்டுநா் மரணத்திற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு அமைச்சா் அதிஷி அண்மையில் கடிதம் எழுதியிருந்த்து குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.