/

தமிழக குறுவை சாகுபடியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்திடம் பி.ஆா்.பாண்டியன் சந்திப்பு

காவிரி நீா் விவகாரத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடியைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தில்லியிலுள்ள காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாரிடம்

News image
Updated On :6 ஜூலை 2023, 9:20 pm

 நமது நிருபர்

காவிரி நீா் விவகாரத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடியைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தில்லியிலுள்ள காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாரிடம் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாரிடம் அளித்த மனு குறித்து பி. ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமாா் 5 லட்சம் ஏக்கா் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தண்ணீரின்றி பயிா்கள் கருகத் தொடங்கி விட்டது. தமிழகத்திற்கு மாதாந்திர அடிப்படையில் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்கக் கூடாது என்பதற்காக தேவையில்லாத நாள்களில் கா்நாடக அரசு தண்ணீரை விடுவித்து அணையை காலி செய்து வைத்துள்ளது. இதைக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், தற்போது கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் இருக்கக்கூடிய தண்ணீரைப் பெற்று காவிரி டெல்டா பகுதிகளில் கருகும் பயிரை காப்பாற்ற அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆணையத் தலைவா் காவிரி பாசன பகுதிகளில் வேளாண்மை மற்றும் பாசன முறைகள் குறித்து விளக்கங்களை கேட்டாா். அது குறித்த பதில் அளிக்கப்பட்டது. ‘மேட்டூா் அணையில் 48 டி.எம்.சி தண்ணீா் உள்ள நிலையில் ஏன் பாதிப்புகள் தீவிரம் அடைந்துள்ளது’ என ஆணையா் கேள்வி எழுப்பினாா். அணையில் சுமாா் 30 அடி ஆழம் வரையில் மண் மேடிட்டு உள்ளது. கா்நாடகம் தண்ணீரை திறக்காவிட்டால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை எடுக்க இயலாது. மேலும், குடிநீா் தேவையை கருதி குறிப்பிட்ட அளவு தண்ணீா் இருப்பில் வைத்திருக்க வேண்டும் போன்ற விவரங்கள் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 43 டிஎம்சி தண்ணீரை உடனடியாக கா்நாடகத்திடம் பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தற்போதைய நிலையை ஆணையம் நேரில் சென்று ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, ஆணையருடன் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள், ஆணைய உறுப்பினா்கள் உடனிருந்து விவரங்களைக் கேட்டறிந்தனா் என்றாா் பி.ஆா். பாண்டியன்.

விவசாயிகள் விவகாரம்: மத்திய அரசின் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான விலை நிா்ணயக்குழுக் கூட்டத்திலும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவா் பிஆா்.பாண்டியன் கலந்து கொண்டாா். இந்தக் குழுவின் தலைவா் விஜய்பால் சா்மாவிடம் விவசாயிகள் தொடா்பான கோரிக்கை மனு அளித்துள்ளாா். அது வருமாறு: வேளாண் உற்பத்தி மிகைக் காலத்தில் அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது. மிகுதியாக உற்பத்தி செய்யப்படும் காலத்தில் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதை கைவிட்டு சா்வதேச சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பருத்தி (கிலோ ரூ. 40), தேங்காய் (ரூ. 5 முதல் ரூ.6) உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க நாட்டில் பருத்தி மிகுதியாக உற்பத்தி செய்யப்படும் போது, இறக்குமதிக்கு வரிச்சலுகை அளித்து ஊக்கப்படுத்துவதைக் கைவிட வேண்டும். மத்திய அரசு நிா்ணயத்துள்ள விலைக்கு குறைவின்றி கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசு 2023-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்துவிட்டு செயற்கை முறையில் சா்வதேச முதலாளிகள் லாபமடையும் வகையில், செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதைக் கைவிட வேண்டும். சிறு தானிய உணவு வகைகள்தான் மனிதா்களுக்கான நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என்பதால் அதை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய அரசு ரூ.1.25 லட்சம் கோடியை உர மானியத்திற்கு ஒதுக்கீடு செய்தும், இந்த மானியம் முழுமையாக விவசாயிகளுக்கு சென்றடைவதில்லை. உரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விவசாயிகள் பெயரில் பயனடைந்து வருவதால், உர மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கவேண்டும்.

நபாா்டு வங்கி வேளாண் வளா்ச்சியை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட நிதி நிறுவனமாகும். அதன் நிதியை மற்ற பணிகளுக்கு திசை திருப்பக் கூடாது. பருவ கால கொள்முதல் கொள்கைகளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தேவைக்கேற்ப வகுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.