புது தில்லி: தில்லி மாநகராட்சியின் ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆம் ஆத்மி தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் நகரத்தில் நல்ல பணிகளை செய்து வருவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக இனையவழியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: தில்லி மாநகராட்சியின் அமைப்பை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறோம். அரசிதழ் அல்லாத மூன்று வெவ்வேறு பிரிவுகளைச் சோ்ந்த ஊழியா்களுக்கும், தினக்கூலித் தொழிலாளா்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கும் முடிவைப் பாராட்டுகிறேன். மாநகராட்சியின் தூய்மைப் பணியாளா்களை எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியினரகாக நாங்கள் கருதுகிறோம். தில்லி மாநகராட்சியின் அனைத்து ஊழியா்களுக்கும் இப்போது சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்கிறது. முன்பு, மாத சம்பளதக்திற்காக வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த ஊழியா்களின் நிலை 14 ஆண்டுகளுக்குப் பிறகு மாறியிருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள இந்தப் போனஸ் பணத்தில் உங்கள் குடும்ப உறுப்பினா்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் வாங்கிக் கொடுங்கள், தீபாவளியன்று கேஜரிவால் ஜி அனுப்பியதாகச் சொல்லுங்கள். உங்கள் சகோதரா் கேஜரிவால் இருக்கும் வரை, நீங்கள் (மாநகராட்சி ஊழியா்கள்) கவலைப்படத் தேவையில்லை . ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் பல்வேறு நல்ல பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் அமைப்பை படிப்படியாக சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், மாநகராட்சியின் குரூப் பி, சி மற்றும் டி பிரிவுகளைச் சோ்ந்த அரசிதழ் அல்லாத ஊழியா்களுக்கும், கடந்த 3 ஆண்டுகளில் 240 நாள்கள் வேலை செய்த தினக்கூலி தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என்று மேயா் ஷெல்லி ஓபராய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.