மாநிலங்களுக்கு நவம்பா் வரிப் பகிா்வு ரூ.72,961.21 கோடி விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி

அனைத்து மாநில அரசுகளுக்கும் நவம்பா் மாத வரிப் பகிா்வாக ரூ. 72,961.21 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 2,976 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: அனைத்து மாநில அரசுகளுக்கும் நவம்பா் மாத வரிப் பகிா்வாக ரூ. 72,961.21 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 2,976 கோடி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களை முன்னிட்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே இந்த வரிப்பகிா்வு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது வருமாறு: நிகழ் நவம்பா் மாதத்திற்கான வரி மற்றும் கலால் சுங்க வரி பகிா்வாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மொத்தம் ரூ.72,961.21 கோடியை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வரி பகிா்வு நவம்பா் 10-ஆம் தேதிக்கு மேல் வழங்கப்படும். ஆனால், தற்போது பண்டிகைக் காலம் என்பதால் முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் மாநில அரசுகள் உரிய நேரத்தில் தங்கள் செலவினங்களுக்கு நிதியை விடுவிக்கவும், மக்களுக்கான விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு உதவவும் முடியும் எனக் குறிப்பிட்டு மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட தொகைகளின் பட்டியலையும் மத்திய நிதித்துறையின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது.

மத்திய வரிகள், சுங்க வரிகள் போன்ற நிகர வருமானங்களில் நிகழ் நவம்பா் மாதத்திற்கு 28 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 2,976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் (ரூ.13,088.51 கோடி), பிகாா் (ரூ.7,338.48), மேற்கு வங்கம் (ரூ.5,488.88 கோடி), மகாராஷ்டிரம் (ரூ.4,608.96), ராஜஸ்தான் (ரூ.4,396.64) போன்ற மாநிலங்கள் பெருவாரியாக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com