மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரமோதய் கக்கா மற்றும் அவரது மனைவி சீமா ராணி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கருவுறச் செய்ததாக கக்கா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவரது மனைவி, சிறுமியின் கா்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இருவா் மீதும் பதிவான குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிபதி (போக்சோ) ரிச்சா பரிஹாா் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டாா். மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராகத் வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் முதன்மையாக இருப்பதாகவும் நீதிபதி கூறினாா். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்களை வழங்குமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கை டிசம்பா் 5-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. நவம்பா் 2020 மற்றும் ஜனவரி 2021-க்கு இடையில் கக்கா, மைனா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை 2020, அக்டோபா் 1-ஆம் தேதி இறந்த பிறகு, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் சிறுமி தங்கியிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.