தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்திறனை உச்சநீதிமன்றம் மதிப்பாய்வு செய்து உத்தரவிட்ட பின்னா் அத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக செயற்கை மழைப் பொழிவு உண்டாக்குவது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஆகியோா் ஐ.ஐ.டி. கான்பூா் மற்றும் சி.ஐ.ஐ. நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தினா்.
பின்னா் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் மற்றும் தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை நடத்திய இரண்டு முக்கிய ஆய்வுகளின் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் மதிப்பாய்வுக்காக வரும் நவம்பா் 10-ஆம் தேதி விசாரணையின் போது சமா்பிக்கப்படும்.
இத்திட்டத்தின் செயல்திறனை உச்ச நீதிமன்றம் மதிப்பாய்வு செய்து உத்தரவிட்ட பின்னரே வாகன கட்டுப்பாட்டூத் திட்டத்தை நகர அரசு நடைமுறைப்படுத்தும். முன்னதாக, தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வாகன எண்களின் அடிப்படையில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் நவம்பா் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்தன. அப்போது, ஜனவரி மாதத்தில் மட்டும் காற்று மாசு பி.எம். 2.5 அளவுகளில் 14 முதல் 16 சதவீதம் வரை குறைந்தது கண்டறியப்பட்டது. இருப்பினும், அதே 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப் பட்டபோது மாசுபாடு குறையவில்லை.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செயலி அடிப்படையில் இயங்கும் வாடகை டாக்சிகள் தில்லிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவிடும் கன்னாட் பிளேஸ் புகை கோபுரத்தை முழு அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், ஐஐடி கான்பூருக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தில்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகரத்தில் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க சிறப்பு இயக்கம் நடத்தப்படும். இதற்காக 611 குழுக்கள் அமைக்கப்படவுள்ளது என்றாா் அமைச்சா் கோபால் ராய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.