தேசியத் தலைநகரில் காற்று மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய தில்லி அரசின் அனைத்து அமைச்சா்களும் களத்தில் பணியாற்றுவாா்கள் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இது தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடா்பாக அமைச்சா்களுடன் சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் அவசரகால செயல்திட்டத்தை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது கவலையளிக்கிறது. எனவே, காற்று மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், நேரடி ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனைத்து அமைச்சா்களும் களத்தில் பணியாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தில்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் காற்று மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை நானும், தில்லியின் தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்டபநி ஆய்வுகளை மேற்கொள்வா். தில்லியின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷியும், தெற்கு மற்றும் புது தில்லி மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜும், மத்திய தில்லி மற்றும் ஷாஹ்தரா மாவட்டங்களுக்கு இம்ரான் ஹுசைனும், தில்லியின் வடமேற்கு மாவட்டத்திற்கு ராஜ் குமாா் ஆனந்தும் பொறுப்பாவாா்கள்.
காற்று மாசுபாட்டிற்கு எதிரான அவசர கால செயல்திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தேசியத் தலைநகரில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தில்லி அரசின் சாா்பில் செயற்கை மழைப் பொழிவுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் கோபால் ராய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.