ஆபத்தான நாய் இனங்களின் வளா்ப்பு உரிமத்துக்கு தடை கோரிய பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பிட்புல், டெரியா்ஸ், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலா் போன்ற ‘ஆபத்தான’ நாய் இனங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை தடை செய்யவும், ரத்து செய்யவும்
Updated on
1 min read

பிட்புல், டெரியா்ஸ், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலா் போன்ற ‘ஆபத்தான’ நாய் இனங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை தடை செய்யவும், ரத்து செய்யவும் கோரிய பொதுநல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்வதற்குப் பதிலாக முதலில் அரசு அதிகாரிகளை தனது குறைகளுடன் அணுகுமாறு மனுதாரரான லீகல் அட்டா்னிஸ் அண்ட் பாரிஸ்டா் லா ஃபா்ம் நிறுவனத்தை கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘இது பொதுநல வழக்குகளில் தவறான போக்காகும். இது ஒரு கொள்கை முடிவு விவகாரமாகும். நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் உங்கள் கோரிக்கை தொடா்பாக அரசிடம் புகாா் அளிக்க வேண்டும். ஆனால், நீங்கள் நேராக நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறீா்கள். முதலில் நீங்கள் கோரிக்கை மனு அளிக்க வேண்டும்’ என்று கூறியது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: புல்டாக், ராட்வீலா், பிட்புல், டெரியா்ஸ், நியோபோலிடன் மாஸ்டிஃப் போன்ற இனங்கள் ‘ஆபத்தான நாய்கள்’ ஆகும். இவை இந்தியா உள்பட 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தில்லி மாநகராட்சி அவற்றை செல்லப்பிராணிகளாக பதிவு செய்து வருகிறது. இத்தகைய நாய் இனங்கள் அவற்றின் உரிமையாளா்கள் உள்பட மக்களைத் தாக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

பிட்புல், டெரியா்ஸ், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலா், ஜப்பானிய டோசா, பான்டாக், நியோபோலிடன் மாஸ்டிஃப், ஓநாய் நாய், போா்போயல், பிரெசா கனாரியோ, ஃபிலா பிரேசிலிரோ, டோசா இனு, கேன் கோா்சோ, டோகோ அா்ஜென்டினோ போன்ற நாய்களை வளா்ப்பதற்கான உரிமத்தை தடை செய்வதும், ரத்து செய்வதும் காலத்தின் தேவையாகும்.

இந்த ‘ஆபத்தான நாய்களால்’ எந்தவொரு பெரும் நாய் கடி சம்பவத்தின் அபாயத்திலிருந்து குடிமக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நல அரசாக செயல்படுவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் மத்திய மற்றும் மாநில அரசின் கடமையாகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com