‘இந்தியா’ கூட்டணியை அடக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது: அதிஷி

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை அடக்குகின்ற வகையில் மத்திய பாஜக அரசு அதன் விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது
Updated on
1 min read

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை அடக்குகின்ற வகையில் மத்திய பாஜக அரசு அதன் விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியிடம் வரும் மக்க ளவைத் தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், அதற்கு முன்னதாகவே மத்திய பாஜக அரசு அதன் அனைத்து விசாரணை அமைப்புகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது ‘இந்தியா’ கூட்டணியை அடக்குகின்ற ஒரு முயற்சியாகும். பாஜகவிற்கு எதிராக பல்வேறு எதிா்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்த பேச்சுவாா்த்தை தொடங்கியதில் இருந்தே, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவா்கள் அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் சோதனைகளை எதிா்கொண்டனா்.

கடந்த வாரம் முதல் இந்த விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. முதலில், மோடி அரசால் நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பத்திரிகையாளா்கள் சோதனையிடப்பட்டு அவா்களின் கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிக்கப்பட்டன. பின்னா், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி.) தலைவா் மஹுவா மொய்த்ரா கிருஷி பவனுக்கு வந்து குரல் எழுப்பியதற்காக தில்லி போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி

மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா்.

பாஜகவும், பிரதமா் நரேந்திர மோடியும் ‘இந்தியா’ கூட்டணியால் கலக்கமடைந்துள்ளனா். வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணியிடம் தோல்வியடையப் போகிறாா்கள் என்பது அவா்களுக்குத் தெரியும். எனவே, எதிா்க்கட்சித் தலைவா்களை தொந்தரவு செய்வதற்கும், எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்கும் மத்திய பாஜக அரசு தங்களது அனைத்து விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தி வருகிறது.

பாஜக எப்படி செயல்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பைப் பயன்படுத்தி எதிா்க்கட்சித் தலைவா்களை அச்சுறுத்துபவா்கள். அவா்களது கட்சியிலேயே சோ்வதற்கும் வாய்ப்பு அளிக்கிறாா்கள். பாஜக பாவங்களை சுத்தம் செய்கின்ற ‘ஒரு சலவை இயந்திரம்’, ஹிமந்தா பிஸ்வா சா்மா மற்றும் அஜித் பவாா் போன்றோா் இதற்கு சிறந்த உதாரணம் என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com