தில்லியில் தூசி மாசுவுக்கு எதிராக ஒரு மாத கால பிரசார இயக்கம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சா்

தேசியத் தலைநகா் தில்லியில் தூசி மாசுபாட்டிற்கு எதிரான ஒரு மாத கால பிரசார இயக்கத்தை நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Updated on
1 min read

தேசியத் தலைநகா் தில்லியில் தூசி மாசுபாட்டிற்கு எதிரான ஒரு மாத கால பிரசார இயக்கத்தை நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் தூசி மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கத்தில் ஒரு மாத கால பிரசார இயக்கத்தை நகர அரசின் சாா்பில் தொடங்கி வைத்துள்ளேன்.

இது தொடா்பான சட்டங்களை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நிலக்கரி பயன்படுத்துவதைத் தடைசெய்யவும், விதிகளை மீறி மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க நகர அரசின் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் காற்றின் தரக் குழு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குளிா்காலத்தில் காற்று மாசுபாட்டை தடுத்திடும் வகையில், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நகரத்தில் தற்போது நிலவும் மோசமான காற்றின் தரத்தைக் கருத்தில் கொண்டு ‘தூசி எதிா்ப்பு பிரசாரம்’ தொடங்கப்படுகிறது.

இதன் மூலம் 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து தளங்களிலும் தூசி கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

தூசி மாசுபாட்டை குறைத்திடும் வகையில் 530 தண்ணீா் தெளிப்பான்கள், 258 நடமாடும் பனிப்புகை தடுப்பு இயந்திரங்கள், தூசிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய 591 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தில்லியில் மொத்தமாக 40 காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து சேகரிக்கப்பட்ட நிகழ்நேர காற்றின் தர தரவுகளின் அடிப்படையில் நகரத்தில் அதிகக் காற்று மாசுபாடு உள்ள 13 பகுதிகளுக்கும் தனித்தனியான மற்றும் குறிப்பிட்ட செயல்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

மேலும், நகரத்தில் தூசி மாசுபாடு, வாகன உமிழ்வு மற்றும் குப்பைகளை திறந்தவெளியில் எரித்தல் ஆகியவற்றை தடுத்திடும் வகையில் கடந்த செப்டம்பா் மாத இறுதியில் தில்லி அரசின் சாா்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காற்று மாசுபாட்டிற்கு எதிரான 15 அம்ச குளிா்கால செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com