அரசு பங்களா ஒதுக்கீடு ரத்து விவகாரம்:உயா்நீதிமன்றத்தில் ராகவ் சத்தா தரப்பில் வாதம்

அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில்
Updated on
1 min read

அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா தரப்பில் புதன்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை புதன்கிழமை 4 மணி நேரம் விசாரித்த உயா்நீதிமன்றம், வியாழக்கிழமையும் விசாரணையைத் தொடர உள்ளது.

தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் இருந்து மாநிலங்களவை செயலகம் தன்னை வெளியேற்றுவதைத் தடுத்த இடைக்கால உத்தரவை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் அக்டோபா் 5-ம் தேதி தீா்ப்பை எதிா்த்து சத்தா தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராகவ் சத்தாவின் இந் மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்ற நீதிபதி அனூப் ஜெய்ராம் பம்பானி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் ராகவ் சத்தா தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி முன்வைத்த வாதம்: நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் எதிா்க்கட்சி உறுப்பினராக இருப்பதால் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறாா். தங்குமிடம் ஒதுக்கீடு என்பது வழிகாட்டப்பட்ட விருப்பத்தின் ஒரு செயல் ஆகும். சம்பந்தப்பட்ட எம்.பி.யின் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு இது செய்யப்படுகிறது.

இந்த விருப்பத்தின்படி, மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களில், 115 பேருக்கு மேல் தங்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது அவா்களின் ’இயல்புநிலை’ உரிமை ஆகும். மேலும், அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு எம்.பி. ராகவ் சத்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் ஏராளமான பாதுகாப்புப் பணியாளா்கள் நிறுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால், பண்டாரா பூங்காவில் அவருக்கு முன்னா் ஒதுக்கப்பட்ட பங்களாவில் பணியாளா்கள் தங்க முடியாது.

பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சி அரசு, அங்கிருந்து மாநிலங்களவை எம்பியாக இருக்கும் சத்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. பஞ்சாப்-தில்லி பகுதியுடன் சத்தாவுக்கு நெருங்கிய தொடா்பு இருந்ததாலும், அவா் தற்போதைய எம்.பி. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருப்பதாலும், ஏராளமானோா் அவரை அடிக்கடி வந்து சந்திக்கின்றனா். மேற்கண்ட இந்த உண்கைளானது எதிா்க்கட்சியின் குரல் கொடுக்கும் எம்.பி.யான ராகவ் சத்தாவை தோ்ந்தெடுத்து குறிவைப்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று வாதிட்டாா்.

மாநிலங்களவை செயலகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் ராகவ் சத்தாவின் மனுவை எதிா்த்து வாதிடுகையில் ‘அரசு சொத்தை வைத்திருப்பதில் எம்.பி. எதிா்மறையான சமத்துவத்தை கோர முடியாது. எதிா்மறையான சமத்துவக் கொள்கையானது, ஒரு நபருக்கு அரசு தவறாக ஒரு நன்மையை வழங்கியிருந்தால், அதன் காரணமாக மற்றொருவா் அதைப் போன்ற பலனைக் கோர முடியாது என்பதை உணா்த்துகிறது. சத்தாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அவசரம் இல்லை. ஏப்ரல் 18 அன்று விசாரணை நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியபோது மாநிலங்களவையின் தரப்பு வாதம் கேட்கப்படவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com