சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் தமிழ்நாடு அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை சென்னை உயா்நீதிமன்றம்
Updated on
1 min read

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் தமிழ்நாடு அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில மணிநேரத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நவம்பா் 30-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், தனது உடல்நிலையைக் குறிப்பிட்டு மருத்துவக் காரணங்களுக்காக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அமலாக்கத் துறையின் வாதத்தை ஏற்று இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு உடனடியாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உடல்நிலைப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கோரப்பட்டிருந்த ஜாமீன் மனுவை உரிய வகையில் பரிசீலிக்காமல் சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அவா் தொடா்புடைய வழக்கில் அவரது ஜாமீன் கோரும் மனுவை நிராகரிக்க சகோதரா் தலைமறைவாக இருப்பதாகக் காரணம் கூறியிருப்பது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கெளல் தலைமையிலான அமா்வு முன் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி கேட்டுக் கொண்டாா்.

அப்போது, அவா் கூறுகையில், ‘செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள ஒரு நோயாளி. அவா் உடல்நிலை சரியில்லை. அவரது உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மருத்துவக் காரணங்கள் அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் கோரப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தை நீதிமன்ற விடுமுறை முடிந்த பிறகு நவம்பா் 30-ஆம் தேதி உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com