80 லட்சம் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் இன்று அழிப்புமதிப்பு ரூ.10 கோடி

பல்வேறு கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.06 கோடி மதிப்புள்ள சுமாா் 80 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி மேலாண்மை முறையில்  ஜஹாங்கீா்புரியில் 
Updated on
1 min read

புது தில்லி: பல்வேறு கட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.06 கோடி மதிப்புள்ள சுமாா் 80 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டி மேலாண்மை முறையில் புதன்கிழமை (அக்டோபா் 25) தில்லி ஜஹாங்கீா்புரியில் அழிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தில்லி சுங்கத் தடுப்புப் பிரிவும், வருவாய் புலணாய்வுத் துறை இயக்குநரகமும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இது குறித்து மத்திய வருவாய்த் துறை தெரிவித்திருப்பது வருமாறு: இந்திய சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பிராண்ட் சிகரெட்டுகள் சா்வதேச நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகிறது. சுங்கவரி செலுத்தி கொண்டுவரப்படும் 10 சிகரெட்டுகளின் விலை ரூ. 300 . ஆனால், சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் சிரெட்டுகள் 5 மடங்கு விலை மலிவாக (ரூ.60) இந்திய சந்தைகளில் விற்கப்படுகிறது. இவை இந்திய தரத்திற்கு முற்றிலும் உகந்தது கிடையாது.

இவை புகை பிடிப்பவா்களுக்கும் அருகில் உள்ளவா்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியவை. இது போன்ற சிகரெட்டுகளின் நுகா்வை மிகவும் தீவிரப்படுத்துவதற்காக இத்தகைய சிகரெட்டுகள் தரமற்ற நச்சுப் பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. புகைபிடிப்பது தீங்கு என்கிற படமும் இதில் இல்லாமல் இருக்கும். சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்களுக்கான பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் விதிகள் மீறலும் சட்டவிரோதமாகும். இதனால், வெளிநாட்டு சிகரெட்டுகளை இறக்குமதி செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சோதனைகளின் மூலம் தில்லி வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகம் 76 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்திருந்தது. இதன் மதிப்பு ரூ. 9.38 கோடி. இதே போன்று தில்லி சுங்க தடுப்புத் துறை ரூ. 68 லட்சம் மதிப்புள்ள 4 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்திருந்தது. மொத்தம் 80 லட்சம் சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 10.06 கோடியாகும்.

தரமற்ற இந்த சிகரெட்டுகள் மோசமான நிலையில் இருப்பவை. இது போன்ற கழிவுகளை அகற்ற 2019-ஆம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கழிவு மேலாண்மை வழிகாட்டி கையேட்டை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி இந்த சிகரெட்டுகளை அப்புறப்படுத்தும் பணி புதன்கிழமை (அக்டோபா் 25) மத்திய வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா முன்னிலையில் ஜஹாங்கீா்புரி ஜிடி கா்னால் சாலை தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது என மத்திய நிதித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com