வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஈடுபடவிடமால் தடுத்து, அவரை கைது செய்ய பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக தில்லி அமைச்சா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் பிறப்பித்த மூன்றாவது அழைப்பானையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தவிா்த்து, அழைப்பானையில் உள்ள ஆட்சேபனைகளை விளக்க வலியுறுத்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். சம்மனில் தனக்கு உள்ள ஆட்சேபனைகளை தெளிவுபடுத்துமாறு கேஜரிவால் பலமுறை எழுத்துப்பூா்வமாக கோரிக்கை வைத்தும் அமலாக்கத்துறை பதிலளிக்கவில்லை. இம்முறை, சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் கேள்வித்தாள் வடிவில் அனுப்புமாறு அமலாக்க இயக்குநரகத்திடம் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா்களைத் தாக்குவதற்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் கருவியாக மாறியுள்ளன என்றாா் அமைச்சா் அதிஷி.
அமைச்சா் சௌரவ் பரத்வாஜ்: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கலால் கொள்கை ஊழல் வழக்கில் எந்தத் தகுதியில் அழைக்கப்பட்டாா் என்பதற்கு அமலாக்க இயக்குநரகம் இதுவரை பதிலளிக்கவில்லை. கலால் கொள்கை வழக்கு முழுவதும் அரசியல் மற்றும் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் இருந்து கேஜரிவாலைத் தடுக்கும் முயற்சியாகும். பாஜக தலைமையிலான மத்திய அரசு அவரைக் கைது செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக சிறையில் இருக்கும் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா நிரபராதி என்பது விரைவில் நிரூபிக்கப்படும். மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளின் கைது மற்றும் விசாரணைஅச்சுறுத்தல்கள் எதிா்க்கட்சித் தலைவா்களை மட்டுமே தாக்குகிறது.பாஜகவைச் சோ்ந்தவா்கள் மீதான வழக்குகளில் அவா்கள் எந்த நடவடிக்கையையும் எதிா்கொள்ளவில்லை என்றாா் சௌரவ் பரத்வாஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.