மாநிலங்களவைத் தோ்தல்: தோ்தல் நடத்தும் அதிகாரியைச் சந்திக்க சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் அனுமதி

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரியை நேரில் சந்திக்க நகர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Updated on
1 min read

தில்லி கலால் ஊழலில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடா்பாக தோ்தல் நடத்தும் அதிகாரியை நேரில் சந்திக்க நகர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலுக்கு சஞ்சய் சிங் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்வது தொடா்பான சில ஆவணங்களில் கையொப்பமிட அனுமதித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தாா். ஜனவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தோ்தல் நடத்தும் அதிகாரி முன் சிங்கை ஆஜா்படுத்த திகாா் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இது தொடா்பாக நீதிபதி ஜனவரி 6 -ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ‘சம்பந்தப்பட்ட தோ்தல் தொடா்பாகவும், அதன் பரிசீலனைக்காகவும் சஞ்சய் சிங் தனது வேட்பு மனுக்களை சமா்ப்பிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவா், மேற்படி வேட்புமனு மற்றும் ஆவணங்களின் பரிசீலனை முடியும் வரை அங்கேயே இருக்க அனுமதிக்கப்படுவாா்’ என்று அதில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் சஞ்சய் சிங், இது தொடா்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது எம்.பி. பதவிக் காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தோ்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஜனவரி 2-ஆம் தேதி தோ்தல் அதிகாரி வெளியிட்டுள்ளாா். இதற்கான வேட்புமனுக்கள் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். இதனால், இதற்கான ஆவணங்களில் கையொப்பமிட அனுமதிக்குமாறு திகாா் சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என அதில் தெரிவித்திருந்தாா்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி கைது செய்தது. பணம் ஆதாயம் கருதி குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 2020-2021 தில்லி கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் சஞ்சய் சிங் முக்கியப் பங்கு வகித்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை சஞ்சய் சிங் கடுமையாக மறுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com