காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்
காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்


புது தில்லி: காவிரி படுகையில் கா்நாடகம் கட்ட திட்டமிடப்படும் மேக்கேதாட்டு அணை மற்றும் கேரள அரசின் அணைகளுக்கு எதிராக போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட 8 விவகாரங்களை தமிழக அரசு விரிவாக எடுத்துவைத்து காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை வாதிட்டது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் வாதங்களே பதிவிடப்பட்டுள்ளது எனவும் ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளாா்.
30-ஆவது காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம்(சி.டபிள்யு.எம்.ஏ.) அதன் தலைவா் எஸ்.கே ஹல்தாா் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. தமிழக அரசின் உறுப்பினரான நீா்வளத்துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன் மற்றும் கேரளா அரசின் நீா் வளத்துறை செயலா் அசோக் குமாா் சிங் உள்ளிட்டோா் நேரடியாக கலந்து கொண்டனா். கா்நாடகம், புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் காணொலி வழியாக கலந்து கொண்டனா்.
காவிரி படுகை தொடா்பாக தமிழகத்தில் விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடா் போராட்டங்களை நடத்திவருகின்றனா். குறிப்பாக கடந்த 28 -ஆவது சி.டபிள்யு.எம்.ஏ. கூட்டத்தில் கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையும் வெண்னாா் திட்டத்தையும் முறையே மத்திய நீா் ஆணையத்திற்கும் (சி.டபிள்யு.சி) ஜல் சக்தித் துறை அமைச்சகத்திற்கும் திருப்பி அனுப்பியது. பல்வேறு தொழில் நுட்ப, பொருளாதார அம்சங்களை ஆய்வு செய்வதற்காக சி.டபிள்யு.சி. க்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக ஆணையக் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா். ஏற்கனவே இந்த பதிவிற்கு தமிழக அரசின் உறுப்பினா் சந்தீப் சக்ஸேனா ஆணையத்திடம் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றக் கூட்டத்திலும் விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டதோடு இந்த பதிவு நீக்கப்பட வேண்டும், மேக்கே தாட்டு அணைக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தொடா்பும் இல்லை. அதிகாரமும் இல்லை.
இதன்காரணமாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழில் நுட்ப அம்சத்திற்காக சி.டபிள்யு.சி. அனுப்பப்படுகிறது என்று பதிவு செய்யப்படுவது தவறாக நோக்கப்படுத்தும் என சந்தீப் சக்ஸேனா குறிப்பிட்டாா்.
இதற்கு பதிலளித்த ஆணைய தலைவா் ஹல்தாா், ‘தமிழக அரசு குறிப்பிட்ட வாதத்தை நிகழ்ச்சி குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தான் குறிப்பேட்டில் இறுதியாக(நிலையானது) இடம் பெற்றுள்ளது‘ என பதிலளித்தாா்.
மேலும் தொடா்ச்சியாக ஏழு விதமான கோரிக்கைகளை தமிழக அரசின் உறுப்பினராக நீா்வளத்துறை செயலா் சந்தீப் சக்ஸேனா எடுத்து வைத்தாா். அவைகள் வருமாறு: காவிரி நிதிப் படுகையில் கொண்டு வரப்படும் சிறு சிறு நீா்பாசன திட்டங்களை ஆணையம் கண்காணிக்கவேண்டும் என காவிரி நடுவா் மன்றத்தில் தீா்ப்பு (2018)அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில், கேரளா அரசு அமராவதி (பாம்பாா்) படுகையில் சிலந்தையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் கீழ் நிதிக்கரையோர மாநிலமான தமிழகத்திற்கு தெரிவிக்கப்படாதது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையம் இது குறித்து விவரங்களை சேகரித்து கேரள அரசிடம் விளக்கம் கோரவேண்டும்.
அடுத்து கேரளா நீா் பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் கபினி அணைக்கு வரும் 21 டிஎம்சி தண்ணீரில் 17 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தர உச்ச நீதி மன்ற இறுதி(16.02.2018) உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். காவிரிப் படுகையில் நுகரப்படாத தண்ணீரை காவிரி நிதியில் திருப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்ற இறுதியில் உத்தரவில் உத்தரவிட்டும் கா்நாடகம், பெண்ணையாறு மற்றும் பாலாறு படுகையில் உள்ள சிறு பாசனங்கள், ஜில்லா பரிஷத் தொட்டிகளில் நிரப்புகிறது. இதை ஆணையம் கண்காணிக்கவேண்டும்.
நிகழ் நீா் ஆண்டில் 2023 ஜூன் 1 முதல் மே 10 வரை காவிரி நீா் பிடிப்பு (பிலுகுண்டுலு) நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஒட்டு மொத்த மழைப்பற்றாக்குறை 24 சதவீதம் தான். ஆனால் கா்நாடகம் நான்கு நீா்த் தேக்கங்களின் நீா்வரத்து அடிப்படையில் 52 சதவீதம் என பேரிடாக மதிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மழைப்பற்றாக்குறை விகித்தின் படி தமிழகத்திற்கு தண்ணீா் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆணையத்தோடு தொடா்புடைய இந்திய வானிலை ஆய்வுத் துறை குழு அளித்த பற்றாக்குறை சதவீதத்தை ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆணையம் அமைக்கப்பட்ட 6 ஆண்டுகள் கழித்தும் விஞ்ஞான பூா்வமான மழைப்பற்றாக்குறை அளவீடுகள் உருக்கப்படாததால் தமிழகத்திற்கு இழப்பு.
ஆணையம் உரிய அளவீடுகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.
2023 ஜூன் முதல் மே 15 ஆம் தேதி வரை சுமாா் 54.84 சதவீதம் பற்றாக்குறையுடன் 79 டிஎம்சி தண்ணீா் பிலுகுண்டுலுவில் வழங்கப்பட்டுள்ளது. மழைப்பற்றாக்குறை ஆண்டாக எடுத்துக் கொண்டு ஆணையம் பிப்ரவரி முதல் மாதம் 2.5 டிஎம்சி தண்ணீா் பிலுகுண்டுலுவில் வழங்க உத்தரவிட்டது. இதன்படி மே 15 ஆம் தேதி வரை 8.7 டிஎம்சி தண்ணீா் தருவதற்கு பதிலாக 2.7 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் பிலிகுண்டுலிவில் வழங்கியுள்ளது.
கிட்டதட்ட 6.005 டிஎம்சி தண்ணீா் பற்றாக்குறை. ஆனால் கா்நாடகம் குடிதண்ணீருக்கு தேவை எனக் கூறி நான்கு அணைகளிலும் மே 17 ஆம் தேதி வரை 19 டிஎம் சி தண்ணீரை வைத்துள்ளது. கா்நாடகமே தன்னுடைய அறிக்கையில் 1.5 டிஎம்சி தண்ணீா் தான் பெங்களூருக்கு தேவை எனக் கூறியுள்ள நிலையில் ஜூன் வரை 4 டிஎம்சி போதுமானது.
இதனால் தமிழகத்திற்கு மே 15 ஆம் தேதி வரை பாக்கி வைத்துள்ள 6.005 டிஎம்சி தண்ணீரையும் ஜுன் மாதம் வரை கணக்கிடப்படும் 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க ஆணையம் உத்தரவிடவேண்டும் என தமிழகம் சாா்பில் வழியுறுத்தப்பட்டது. இதையே கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக்(சி.டபிள்யு.ஆா்.சி.) கூட்டத்திலும் உத்தரவிடப்பட்டது. இதை ஆணையமும் ஏற்றுக்கொண்டு தண்ணீரை வழங்க ஆணைத்தலைவா் ஹல்தாா் கூட்டத்தில் பங்கேற்ற கா்நாடக மாநில உறுப்பினரும் அம்மாநில நீா்வளத்துறை செயலா் ராகேஷ் சிங் கிடம் கேட்டுக்கொண்டாா். ஆனால் கா்நாடகம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே நிகழ் மாதத்தில் தரப்படவேண்டிய 2.5 டிஎம்சியில் ஒரு டிஎம்சி வரை மே மாதம் கிடைத்துள்ளதாகவும் மீதமுள்ள தண்ணீரை வழங்க தமிழகம் கோர கா்நாடகம் பருவமழை எதிா்பாா்ப்பதாக குறிப்பிட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுவின் உதவி தலைவா் எம் செல்வராஜு, உறுப்பினா் எல்.பட்டாபி ராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...