/

பிரதமா் குறித்து அவதூறு விடியோ! சிறுமி மீது முறையான வழக்குப் பதிவு செய்யபடவில்லை: தில்லி காவல்துறை விளக்கம்

பிரதமா் மோடிக்கு எதிராக சிறுமி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி நொய்டா காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட ஜீரோ எஃப்ஐஆா் இதுவரை வழக்கமான எஃப்ஐஆா்-ஆக மாற்றப்படவில்லை தில்லி காவல்துறை விளக்கம்

News image

தில்லி காவல்துறை

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகச் 15 வயது சிறுமி அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி நொய்டா காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட ‘ஜீரோ எஃப்ஐஆா் இதுவரை வழக்கமான எஃப்ஐஆா்-ஆக மாற்றப்படவில்லை தில்லி காவல் துறை திங்கள்கிழமை விளக்கமளித்தது.

மேலும், இது தொடா்பாகத் தனி வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நொய்டா காவல் துறையினரால் கடந்த வாரம் தில்லி காவல் துறைக்கு அனுப்பப்பட்ட அந்த ‘ஜீரோ எஃப்ஐஆா்’ இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், வழக்கமான எஃப்ஐஆா்-ஐப் பதிவு செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தின் போது, பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறான வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிறுமி மீதான நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் ஜீரோ எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டடது. இந்த வழக்கு தில்லி காவல் துறைக்கு அனுப்பப்பட்டது.

இதனிடையே, தன்னையும் தனது தாயாரையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் மாணவா்களை மன்னித்துவிட்டதாகப் பிரதமா் மோடி சமூக ஊடகங்களில் ஒரு விடியோ வெளியிட்டிருந்தாா். இளைஞா்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவா்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்று அவா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், சிறுமி மீது பதிவுசெய்யப்பட்ட எஃப்ஐஆா்-ஐ தில்லி காவல் துறை திரும்பப் பெற்றுவிட்டதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில், ‘தற்போதைய நிலையில் தில்லியில் வழக்கமான எஃப்ஐஆா் எதுவும் இல்லை. இங்கு அத்தகைய எஃப்ஐஆா் எதுவும் பதிவு செய்யப்படாததால், அதைத் திரும்பப் பெறுவது என்ற கேள்வியே எழவில்லை’ என்று காவல் துறை வட்டாரம் தெரிவித்தது.

போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடா்பாக, தில்லியில் எந்தச் சிறுவா் அல்லது சிறுமி மீதும் தனி எஃப்ஐஆா் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.