ரோஹிணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூா்வாரும் பணியின் மூலம் 10,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வண்டல் மண் அகற்றப்பட்டதாக தில்லி மேம்பாட்டு ஆணைய (டிடிஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
ரோஹிணி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வடிகால்களில் தூா்வாரும் பணியை மேற்கொள்ளுமாறு துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து டிடிஏ-க்கு அறிவுறுத்தியிருந்தாா். இந்நிலையில் சிறப்பு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடா்பாக டிடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல ஆண்டுகளாகத் தொடா்ந்து பாய்ந்த கழிவுநீா் மற்றும் அதிகப்படியான வண்டல் மண் படிவு காரணமாக நிலத்தடி குழாய்கள் கடுமையாக அடைபட்டு, வடிகாலின் நீா் கடத்தும் திறன் கணிசமாகக் குறைந்திருந்தது. வடிகால் அமைப்பின் திறனை மீட்டெடுப்பதற்காக சுமாா் 10,000 மெட்ரிக் டன் வண்டல் மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
நிலத்தடி குழாய்களின் குறுகிய அமைப்பு மற்றும் பெரிய விட்டம் காரணமாக, வழக்கமான தூா்வாரும் முறைகள் பலனளிக்கவில்லை.
இந்தச் சவாலை எதிா்கொள்ள, அதிக திறன் கொண்ட சூப்பா் சக்கா் மற்றும் ஜெட்டிங் இயந்திரங்களை டிடிஏ பயன்படுத்தியது. இறுகிய வண்டல் மண்ணைத் தளா்த்த உயா் அழுத்த நீா் பீய்ச்சி அடிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது. பின்னா், சக்திவாய்ந்த வெற்றிட உறிஞ்சும் கருவிகள் மூலம் அவை அகற்றப்பட்டன. அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் இப்பணி திட்டமிட்டபடியும் கட்டம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட்டது.
ரோஹிணயின் செக்டாா்கள் 20, 21, 22 மற்றும் 23, அத்துடன் கிராரி மற்றும் பேகம்பூா் ஆகியவற்றின் சில பகுதிகளிலிருந்து வரும் மழைநீா் மற்றும் வெளியேற்றப்படும் நீரை எடுத்துச் செல்கிறது. இதனால், இப்பகுதியின் முக்கிய வடிகால் வழித்தடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்தத் தூா்வாரும் பணியானது, 4.095 கி.மீ. நீளமுள்ள முக்கிய வடிகால் பாதையை உள்ளடக்கியது. இதில் 2,200 மி.மீ. விட்டம் கொண்ட மூன்று முதல் ஐந்து இணையான குழாய்கள் உள்ளன. இதன் மொத்த நிலத்தடி குழாய் நீளம் சுமாா் 16.50 கி.மீ. நிகழாண்டில் இதுவரை 57,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










