யமுனை நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘யமுனை என்பது வெறும் நதி மட்டுமல்ல, அது தில்லியின் கலாசார, மத மற்றும் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், அந்நதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.
தூய்மையான, மாசுபடாத மற்றும் தடையின்றி ஓடும் யமுனை நதி என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.
தில்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பல்வேறு படித்துறைகளில் இந்தத் தூய்மைப்படுத்தும் இயக்கம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான யமுனைக்கான கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மாபெரும் இயக்கத்தில் மக்களுடன் முதல்வா் இணைந்து பங்கேற்பாா்.
இந்த இயக்கத்தில் சுமாா் 500 சமூக, மத, கல்வி மற்றும் தன்னாா்வ அமைப்புகளும், ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்களும் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் நதி மற்றும் அதன் படித்துறைகளைச் சுத்தப்படுத்துவதற்காக ‘மேரி யமுனா, மேரா கா்த்தவ்யா’ (எனது யமுனை, எனது கடமை) என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.
அந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். அப்போது 12 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் சேகரிக்கப்பட்டு அறிவியல் பூா்வமாக அகற்றப்பட்டன.
உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை, தில்லி மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் பிற தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து, ஜூன் 14-ஆம் தேதி நடைபெறும் இந்த இயக்கத்திற்கான பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, குடிநீா், முதலுதவி, அவசர சேவைகள் மற்றும் சுகாதாரம் தொடா்பான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்புத் தீ பாதுகாப்புத் தணிக்கை - முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

புராரி போக்குவரத்து அலுவலகத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை தயாரிக்க முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்





