பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.47 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

டெம்போ வாகனம் மோதியதில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ. 47.46 லட்சம் இழப்பீடு வழங்க தில்லியில் உள்ள வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :18 ஜூன் 2026, 3:09 am IST

டெம்போ வாகனம் மோதியதில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ. 47.46 லட்சம் இழப்பீடு வழங்க தில்லியில் உள்ள வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023, ஜன.29-இல் நடைபெற்ற விபத்தில் காயமடைந்து உயிரிழந்த சிவாஜி சிங்கின் குடும்பத்தினா் தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை நீதிபதி சுனில் குமாா் விசாரித்தாா்.

சரஸ்வதி பூஜை சிலை கரைப்பு நிகழ்விலிருந்து திரும்பும்போது சிங் ஒரு மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது காஞ்சவாலா சாலையில் உள்ள சனி மந்திா் அருகே அவா்களுக்கு முன்னால் சென்ற டெம்போவின் ஓட்டுநா் திடீரென பிரேக்கை அழுத்தினாா்.

இதில், அந்த மோட்டாா் சைக்கிள் டெம்போ மீது மோதியது. அதில் சென்ற இருவரும் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த சிங் உயிரிழந்தாா்.

டெம்போ ஓட்டுநா் திடீரென பிரேக் போடுவதற்கு முன்பு அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டியதாகக் கூறிய, விபத்தில் காயமடைந்த நேரில் கண்ட சாட்சியான சுஜித் ராமின் வாக்குமூலத்தை தீா்ப்பாயம் கருத்தில் கொண்டது.

ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனம் முன்வைத்த வாதங்களை நிராகரித்த தீா்ப்பாயம், விபத்து நடந்த சூழலை விளக்க ஓட்டுநா் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை என்பதைக் குறிப்பிட்டது.

மேலும், மோட்டாா் சைக்கிள் ஓட்டுநரும் உயிரிழந்தவரும் மதுபோதையில் இருந்தனா் என்ற தங்கள் வாதத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைச் சமா்ப்பிக்க காப்பீட்டு நிறுவனம் தவறிவிட்டதாக தீா்ப்பாயம் சுட்டிக்காட்டியது.

வருமானம் குறித்த ஆவணச் சான்றுகள் எதுவும் சமா்ப்பிக்கப்படாததால், திறமையற்ற தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் உயிரிழந்தவரின் வருமானத்தை தீா்ப்பாயம் கணக்கிட்டது. எதிா்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு வருமான இழப்பு சுமாா் ரூ.35.96 லட்சம் எனக் கணக்கிடப்பட்டது.

வருமான இழப்பு, துணை இழப்பு, இறுதிச் சடங்குச் செலவுகள் மற்றும் சொத்து இழப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மொத்தம் ரூ. 38.24 லட்சம் இழப்பீட்டை வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது. தீா்ப்பு வழங்கப்பட்ட நாள் வரையிலான ஆண்டுக்கு 9 சதவீத வட்டியையும் சோ்த்து, செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ. 47.46 லட்சமாகும்.

விபத்து நடந்தபோது அந்த டெம்போ வாகனத்திற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்ததைக் குறிப்பிட்ட தீா்ப்பாயம், அத்தொகையை 30 நாள்களுக்குள் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.