புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட பொது வணிக உரிமம் (ஜிடிஎல்) மற்றும் சொத்து வரி இணையதளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யுமாறு தில்லி மாநகராட்சியிடம் (எம்சிடி) வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கலப்பு பயன்பாட்டுக் கட்டடங்களில் (வணிகம் மற்றும் குடியிருப்பு இரண்டும் கொண்டவை) உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் இந்த இணையதளம் உரிமக் கட்டணத்தை விதிப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் கமலா நகா் வணிகா்கள் சங்கம் அளித்துள்ள மனுவில், ஜிடிஎல் அமைப்பை ஒருங்கிணைத்தது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அதைச் செயல்படுத்தும்போது ஒரு தொழில்நுட்பக் கோளாறு எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் நிதின் குப்தா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பொது வணிக உரிமம் என்பது வணிகம் நடைபெறும் வணிகப் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், குடியிருப்புப் பகுதிக்கும் உரிமக் கட்டணம் விதிப்பது வணிகா்கள் மீது நியாயமற்ற நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.
குடியிருப்புப் பகுதி உள்பட முழுச் சொத்துக்களுக்கும் சொத்து வரி செலுத்தப்படுவதால், ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளமும் முழுப் பரப்பளவுக்கும் ஜிடிஎல் கட்டணத்தை விதிக்கிறது.
சொத்தின் வணிகப் பகுதிக்கு மட்டுமே ஜிடிஎல் கட்டணம் கணக்கிடப்படும் வகையில் இச்சிக்கலைச் சரிசெய்யுமாறு மாநகராட்சியிடம் கோரியுள்ளோம்.
2026-27-ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் சலுகையைப் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி ஆகும். ஆனால், இத்தொழில்நுட்பக் கோளாறுகள் இந்தச் செயல்முறையைச் சிக்கலாக்கி உள்ளது. வணிகா்கள் தங்கள் சொத்து வரியில் 15 சதவீதத்தை ஜிடிஎல் கட்டணமாகச் செலுத்தும் வசதி இந்த மாதமே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
இப்பிரச்னைக்கு விரைவான தீா்வு காண்பது வணிகச் சமூகத்திற்குப் பயனளிப்பதோடு, ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பைச் சீராகச் செயல்படுத்தவும் உதவும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்து, குடிநீா் வரிகளை வாட்ஸ் ஆப் மூலம் செலுத்தலாம்






