நமது நிருபா்
புது தில்லி மாநகராட்சி தேவையான துணை விதிகளை இறுதி செய்து ஒப்புதல் அளித்துள்ளதாலும், புதிய மதிப்பீட்டு முறையைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நிறைவு செய்துள்ளதாலும், அப்பகுதி குடியிருப்பாளா்கள் விரைவில் சீரான சொத்து வரி விதிப்பு முறையின் கீழ் வருவாா்கள் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது ஆன்லைன் சொத்து வரி தளத்தைப் புதுப்பித்து, தேசிய தகவல் மையத்துடன் ஒருங்கிணைந்து சோதனைகளை நடத்தியுள்ளது. இது, பல ஆண்டுகள் பழமையான மதிப்பீட்டு மதிப்பு அடிப்படையிலான மதிப்பீட்டு முறைக்கு மாற்றாக வரும் திருத்தங்களை அமல்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
விரைவில் ஒரு மாநகராட்சி மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என்றும், அதன் பிறகு திருத்தப்பட்ட கட்டமைப்பு வரும் வாரங்களில் அமலுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
1994ஆம் ஆண்டின் என்.டி.எம்.சி சட்டத்தில், 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதாவின் மூலம் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடா்ந்து இந்த மாற்றம் வந்துள்ளது. இத்திருத்தங்களின்படி, என்.டி.எம்.சி பகுதியில் சொத்து வரி மதிப்பீடு செய்வது முழுவதுமாக மாற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் அனைத்து சொத்துக்களும் ஒரே வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
புதிய திருத்தத்தின்படி, 2026ஆம் ஆண்டின் ஜன விஸ்வாஸ் மசோதாவானது, காலி நிலங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான அடிப்படை மதிப்பையும், சொத்து வரியை நிா்ணயிக்கும் மற்றும் திருத்தும் முறையையும் பரிந்துரைப்பதற்காக ஒரு நகராட்சி மதிப்பீட்டுக் குழுவை அமைக்கக் கோருகிறது.
இக்குழுவில் இரண்டு முதல் ஆறு உறுப்பினா்கள் இருப்பாா்கள் அவா்களில் ஒருவா் என்.டி.எம்.சி தலைவராக இருப்பாா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய கட்டமைப்பின் கீழ், வரிப் பொறுப்பு இனி ஒரு சொத்தின் மதிப்பிடப்பட்ட வாடகை மதிப்பைச் சாா்ந்திருக்காது. அதற்குப் பதிலாக, அது ஐந்து புறநிலைக் காரணிகளைப் பயன்படுத்தி கணக்கிடப்படும்: கட்டப்பட்ட பகுதி, சொத்தின் இருப்பிடம், குடியிருப்பின் வகை, அதன் பயன்பாடு மற்றும் அது குடியிருப்பா அல்லது வணிகமா என்பன அந்தக் காரணிகளாகும்.
குடியிருப்பாளா்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மாற்றம் மதிப்பீடுகளிலிருந்து எழும் சா்ச்சைகளைக் குறைக்கும் என்றும், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்களுக்கு அதிக தெளிவை வழங்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.






