ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலைகளில் குறைக்கப்பட்டும் சில்லறை விற்பனையில் குறைக்கப்படாத அரிசி விலை: பொதுமக்கள் வேதனை

ஆலங்குளம்,பிப்.17:அரிசிக்கான விலையை, ஆலை அதிபர்கள் குறைத்துவிட்ட நிலையில், சில்லறை விற்பனை விலையையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.   தென் மாவட்ட விவசாயிகள், பிசான பருவத்தில் பல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:22 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம்,பிப்.17:அரிசிக்கான விலையை, ஆலை அதிபர்கள் குறைத்துவிட்ட நிலையில், சில்லறை விற்பனை விலையையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

  தென் மாவட்ட விவசாயிகள், பிசான பருவத்தில் பல்வேறு ரக நெல்களை பயிரிட்டாலும், பெருமளவில் அம்பை 16  நெல் ரகத்தைப் பயிரிட்டு நல்ல மகசூலைப் பெற்றனர்.  நெல்லும் தரமானதாக இருந்ததால், அந்தந்த பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு, அந்தந்த பகுதிகளிலேயே அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டது. அதிக விளைச்சல் காரணமாக நெல் கொள்முதல் விலையும் குறைக்கப்பட்டது.

  முன்பெல்லாம் தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் இருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவில் நெல்லை நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும். ஆலங்குளம்,  கீழப்பாவூர் மற்றும் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் உள்ள ஆலை அதிபர்கள், இங்கு நெல் உற்பத்திக் குறைவாக இருக்கும் என்பதால், வட மாவட்டங்களில் இருந்து நெல்லை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து அரிசி உற்பத்தி நடைபெறும்.  

  ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள சுமார் 76 நவீன அரிசி ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி, கேரளத்துக்கும், திருநெல்வேலி,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதனால் அரிசி நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. தென் மாவட்டங்களில் உள்ள அரிசி விலையை சந்தையில் நிர்ணயிக்கும் சக்தியாக இப் பகுதி ஆலைகள் விளங்கிவருகின்றன.

    தற்போது, பொன்னி உள்பட அனைத்து வகையான நெல் ரகங்களும் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால், நெல் கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆலை அதிபர்கள் தள்ளப்பட்டனர்.

  இதனால்  ஒரு கோட்டை(150 கிலோ) நெல் ரூ.1300 - க்கு கொள்முதல் செய்யப்பட்டது. முன்பு, ஒரு மூட்டை நெல் (73 கிலோ) ரூ.950- க்கு கொள்முதல் செய்யப்பட்டது, தற்போது ரூ.700- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு பொன்னி ரகம் ஒரு மூடை ரூ 1100 -க்கு கொள்முதல் செய்யப்பட்டது, தற்போது ரூ.750- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

  இந்நிலையில், உற்பத்தி பெருக்கத்தால் நெல் கொள்முதல் விலையை குறைத்ததோடு, அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதால், அரிசியின் விலையைக் குறைத்ததாக     

ஆலை அதிபர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக கடந்த 20 நாள்களில் மட்டும் குறைந்தபட்சம் ரூ.450 முதல் அதிகபட்சம் ரூ 550 வரை பல்வேறு அரிசி ரகங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அம்பை 16 (பழைய விலை ரூ. 2150) ரூ.1700-க்கும், ஐ.ஆர். 20  (பழைய விலை ரூ.2200) ரூ.1650 -க்கும், கல்ச்சர் பொன்னி ரகம் (பழைய விலை ரூ.2200) ரூ.1700-க்கும், அம்பை 16 பச்சரிசி ரகம் (பழைய விலை ரூ.2100) ரூ.1550 க்கும், ஐ.ஆர். 45 ரகம்  (பழைய விலை ரூ.2200) ரூ.1700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.

  தற்போது ஆங்காங்கே நெல் அறுவடை நடந்து கொண்டே இருப்பதாலும், மேலும், 2 மாதங்கள் வரை அரிசி விலை குறைந்து கொண்டே போகலாம் எனவும் தெரிகிறது. இதனால், ஆலை உரிமையாளர்கள் அரிசியைத் தேக்கி வைக்க விரும்புவதில்லை. அத்துடன் நெல்லை அதிகளவில் கொள்முதல் செய்யத் தயங்குகின்றனர்.

 இதனால், தற்போது வேறு மாவட்டங்களுக்கு நெல் ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் கர்நாடகத்தில் இருந்து பொன்னி இறக்குமதி செய்யப்பட்டது போய், தற்போது மாண்டியா, துங்பூர் மாவட்டங்களுக்கு பொன்னி ரகமும், மற்ற ரகங்களும் அதிகளவில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் சூழல் உள்ளது.

   இதுகுறித்து ஆலங்குளம் வட்டார ஆலை அதிபர்கள் சங்கச் செயலர் ஆர்.வி.எல்.மதிவாணன் கூறியதாவது:

   ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில் பிசான சாகுபடியில் நெற்பயிரில், சிறப்பான மகசூலை ஈட்டியுள்ளனர் விவசாயிகள்.

  முன்பெல்லாம், இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் அரிசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும்.

இதனால், நெல்லை நல்ல விலைக்கு கொள்முதல் செய்ததோடு, அரிசியையும் நல்ல விலைக்கு விற்று வந்தோம்.

 தற்போது நெல் வரத்து அதிகமாக இருப்பதால்,அரிசி உற்பத்தி அதிகமாக இருப்பதும், கேரளம் போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அரிசி ஏற்றுமதி குறைந்துவிட்ட காரணங்களாலும் அரிசி விலையைக் குறைத்து விற்க வேண்டிய சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். அரிசி விலை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

  அரிசி விலையை கடந்த 20 நாள்களுக்கும் மேலாக ஆலை அதிபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டே வந்த போதிலும், அவர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் விலையைக் குறைக்கவில்லை.  பழைய  விலையிலேயே விற்பனை செய்கின்றனர்.

  ஒரு கிலோ அரிசியை ஆலை அதிபர்களிடம் ரூ.17- க்கு வாங்கும் வியாபாரிகள்,  அதை ரூ.20 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. கொள்முதல் விலையில் இருந்து 50 பைசா உயர்த்தி விற்பனை செய்தாலே மூட்டைக்கு (100 கிலோ) ரூ.50 லாபம் கிடைக்கும்போது, ரூ. 3 லாபத்தில் அதிக லாபம் பார்ப்பதாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.

சில்லறை வியாபாரிகள் அரிசி விலையைக் குறைக்க அதிகாரிகளும், வியாபாரிகளும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.

  இதுகுறித்து சில்லறை வியாபாரிகளிடம் கேட்டபோது, ஆலைகளில் இருந்து அரிசி விலை குறைத்து தரப்படவில்லை என்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.