இது குறித்து திமுக மாவட்ட பிரதிநிதி எம்.ஜோசப்தங்கம், காங்கிரஸ் வட்டார செயலர் எம்.ராஜ்குமார் ஆகியோர் கூறும்போது, ஆலங்குளம் பீடித்தொழிலாளர் மருத்துவமனையில், போதிய இடவசதி இல்லை. சிகிச்சைக்கு வரும் பீடித்தொழிலாளர்கள் உட்கார பெஞ்ச் வசதி கிடையாது. குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் வெயிலில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் இப் பகுதியில் அதிக அளவில் உள்ளனர். ஆனால், வியாதிகளுக்கான மாத்திரைகள் மட்டுமன்றி வைட்டமின் மாத்திரைகளும் போதிய அளவில் இல்லை. தட்டுப்பாடாகவே உள்ளது. மாத்திரைகள் வந்தாலும், ஸ்டாக் வைக்க கூடிய அளவில் போதிய இடவசதி கிடையாது. ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை ஆகியன இல்லாமலும், குறுகிய இடமாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களைக் கண்டறியும் கருவிகளும், ஆய்வக வசதியும் இல்லை. இதை எல்லாம் ஏற்படுத்தும் வகையில் புதிய கட்டடம் அமைத்தும், அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவமனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.