கோவில்பட்டி காவல் நிலையங்களுக்கு போதுமான காவலர்கள் நியமிக்கப்படுவார்களா?

கோவில்பட்டி, ஜன. 29: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயங்கும் 2 காவல் நிலையங்களுக்கும் போதுமான காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை நகரின் மையப் பகுதிக்கு இடம
Updated on
2 min read

கோவில்பட்டி, ஜன. 29: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயங்கும் 2 காவல் நிலையங்களுக்கும் போதுமான காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை நகரின் மையப் பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமான கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, மேற்கு காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு காவல் நிலையம், மதுவிலக்கு காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய பிரிவுகள் இயங்கி வருகின்றன.

கோவில்பட்டியில் தற்போதுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லை.

குறிப்பாக, கிழக்கு காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு பிரிவில் சுமார் 45 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். அதில், சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல, குற்றப் பிரிவிலும் குறைவான காவலர்களே பணியில் இருக்கின்றனர். உதவி ஆய்வாளர்கள் பணியிடத்தில் போதுமான அதிகாரிகள் இருந்து வருகின்றனர்.

ஆனால், சட்டம்- ஒழுங்கையும், குற்றத்தையும் தடுத்து நிறுத்துவதற்கு ஏற்றவாறு காவலர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம், உதவி ஆய்வாளர்கள் பணியிடத்திற்கு ஏற்கெனவே பணியில் இருந்த தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு பெற்று வருகின்றனர். அதன் பின்பு காலியாகும் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பணியிடங்களுக்கு போதுமான காவலர்களை நியமிப்பதில்லை.

இதனால், கோவில்பட்டி நகரின் சட்டம்- ஒழுங்கை பேணிக் காப்பதில் சிரமம் ஏற்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேற்கு காவல் நிலையம்: கோவில்பட்டி நகரின் பிரதான சாலையில் இயங்கி வந்த மேற்கு காவல் நிலையம், சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலையில் கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பதற்கு சுமார் 60 காவலர்கள் தேவை. ஆனால், தற்போது, சுமார் 40 பேர் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல, குற்றப் பிரிவிற்கு 10 காவலர்கள் தேவை. ஆனால், தற்போது, சுமார் 5 பேர் மட்டுமே பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு

கடந்த ஓராண்டாக நிரந்தரமான ஆய்வாளர் கிடையாது.

இதுமட்டுமன்றி, கோவில்பட்டி நகரின் மையப் பகுதியில் இயங்கி வந்த காவல் நிலையம் தற்போது புறவழிச் சாலை அருகே காட்டுப் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் புகார் கொடுக்க செல்வதற்கு அச்சமடைகின்றனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையத்திற்கு தற்போது, ஒரு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால், கோவில்பட்டியில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

போதுமான காவலர்கள் இருந்தால்தான் கோவில்பட்டியில் நிகழும் குற்றம் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

போக்குவரத்து பிரிவு: பெரிய நகரமான கோவில்பட்டிக்கு போதுமான போக்குவரத்து காவலர்களை நியமித்து, போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com