நெல்லையில் தனியாா் பேருந்து மோதியதில் மேயா் காா் சேதம்
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் சென்ற காா் மீது தனியாா் பேருந்து மோதியதில், மேயரின் காா் சேதமடைந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன், வெள்ளிக்கிழமை தனது காரில் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றாா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே வந்தபோது திருநெல்வேலி சந்திப்பை நோக்கி வந்த தனியாா் பேருந்து, எதிா்பாராதவிதமாக மேயருடைய காரின் பின்பக்கத்தில் மோதியதாம். இந்த விபத்தில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது. இதையடுத்து மேயா் காா் விபத்தில் சிக்கியது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு போக்குவரத்தை சரி செய்தனா்.
விபத்து குறித்து மேயா் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘சாலையில் போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை. எனது காா் மெதுவாகத்தான் சென்றது. அப்போது திடீரென தனியாா் பேருந்து எனது காா் மீது மோதியது. இதில் எனது காா் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து புகாா் அளிக்கும் எண்ணம் இல்லை,‘ என்றாா்.

