/

கேரளத்துக்கு கடத்த முயன்ற  3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:50 am IST

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வருவாய்த் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோர் திங்கள்கிழமை இரவு களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். உடனே, காரிலிருந்து அதன் ஓட்டுநர் தப்பிச் சென்றார். காரை சோதனையிட்டதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதே போன்று அழகியமண்டபம் பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில், அப்பகுதி வழியாக வந்த மற்றொரு சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். மார்த்தாண்டம் மேம்பாலம் முடியும் குழித்துறை ஆற்றுப்பாலம் அருகில் வைத்து நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார் உதவியுடன் காரை மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்டதில் அதில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கார் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கொல்லங்கோடு பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையில், மோட்டார் சைக்கிளில் 100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் இருட்டில் தப்பியோடிவிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட 3,100 கிலோ ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலும், வாகனங்கள் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.