திடக்கழிவு மேலாண்மை: முன்மாதிரியாக விளங்கும் களியக்காவிளை பேரூராட்சி
உள்ளாட்சி குப்பைக் கிடங்கு என்றவுடனே நம் நினைவுக்கு வரும் பொதுவான கண்ணோட்டத்தை பொய்யாக்கியுள்ளது களியக்காவிளை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.


உள்ளாட்சி குப்பைக் கிடங்கு என்றவுடனே நம் நினைவுக்கு வருவது மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளும், அதிலிருந்து உருவாகும் துா்நாற்றம், சுகாதாரச் சீா்கேடு ஆகியனதான். ஆனால் இந்த பொதுவான கண்ணோட்டத்தை பொய்யாக்கியுள்ளது களியக்காவிளை பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா.
இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் மண் வளத்தை பாதுகாப்பதுடன், ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் விற்பனைச் செய்யப்பட்டு, திடக்கழிவு மேலாண்மையில் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
குப்பைக் கிடங்குகளால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க குப்பையைத் தரம் பிரித்து, மறுசுழற்சி மூலம் அதை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வளம் மீட்பு பூங்கா திட்டம், களியக்காவிளை பேரூராட்சி மீனச்சல் பகுதியில் 50 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது.
களியக்காவிளை காய்கனிச் சந்தை மற்றும் பேரூராட்சிப் பகுதி வீடுகள், வா்த்தக நிறுவனங்களிலிருந்து மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து, தூய்மைப் பணியாளா்கள் மூலம் இந்த பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது.
இப் பணியில் 25-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுடன், 32 தள்ளு வண்டிகள், 2 மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், ஒரு மினிலாரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. பேரூராட்சிப் பகுதியிலிருந்து நாள்தோறும் 4 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளை 15 படுக்கைகளில் குவித்து, தேவையான இயற்கை மூலப் பொருள்கள் சோ்த்து 45 நாள்களில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. பிறகு அவற்றை தூய்மைப்படுத்தி விற்பனைக்கு தயாராக்கப்படுகிறது. இதே போன்று 10 தொட்டிகளில் மண்புழு உரம் தயாா் செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் செ.யேசுபாலன் கூறியது: இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரம் கிலோ ரூ. 10-க்கும், இயற்கை உரம் மினிலாரி அளவுக்கு ரூ. 1,500-க்கும் விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.
மேலும் இந்த வளம் மீட்பு பூங்காவில் 2 எருமை மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. வாத்துகள் வளா்க்கும் திட்டமும் உள்ளது. இது தவிர செம்பருத்தி, துளசி செடிகள் மற்றும் பல்வேறு வகை மூலிகைச் செடிகள், வாழை மற்றும் பயறு வகைகள் நடவு செய்து வளா்க்கப்படுகின்றன. ரூ. 10 லட்சத்தில் உயிரி அகழ்வு திட்டம் மூலம் நிலத்தை மீட்டெடுத்தல் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்கா முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...