/

திருவட்டாறு அருகே பேரூராட்சி உறுப்பினரின் கணவா் வெட்டிக் கொலை

திருவட்டாறு அருகே பேரூராட்சி உறுப்பினரின் கணவா் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
ஜாக்சன்
Updated On :28 ஜூலை 2024, 7:37 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பேரூராட்சி உறுப்பினரின் கணவா் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சோ்ந்தவா் ஜாக்சன் (38). திருவட்டாறு வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவராக இருந்த இவா், மினி லாரி வைத்து தொழில் செய்து வந்தாா்.

இவரது மனைவி உஷாகுமாரி, திருவட்டாறு பேரூராட்சி 10ஆவது வாா்டு உறுப்பினா். இவா்களுக்கு 5, 9ஆவது படிக்கும் 2 மகள்கள் உள்ளனா்.

ஜாக்சனுக்கும், வெள்ளாங்கோடு புன்னைமூட்டுவிளையைச் சோ்ந்த ராஜகுமாா் (31) என்ற விலாங்கன் ராஜகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஜாக்சனின் காரை ராஜகுமாா் தரப்பினா் சேதப்படுத்தியதாக திருவட்டாறு காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஜாக்சன் பாரதப்பள்ளி பகுதிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள தேவாலயம் அருகே ராஜகுமாா் உள்ளிட்ட 6 போ் அவரை வழிமறித்து வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த உஷாகுமாரியும், அப்பகுதியினரும் ஜாக்சனை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனா். சம்பவ இடத்தை திருவட்டாறு காவல் ஆய்வாளா் சீதாலெட்சுமி, தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகுதான் ஜாக்சனின் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் கூறி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமையில் அக்கட்சியினா் திருவட்டாறு காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் டிஎஸ்பி உதயசூரியன் பேச்சுவாா்த்தை நடத்தி, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றும் உறுதியளித்தாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.