குமரியில் யானை தாக்கி தொழிலாளி பலி

Published on

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆறுகாணி கீழ்மலையில் ஆதிவாசி பழங்குடியின மக்களின் குடியிருப்பு உள்ளது. இந்த மக்கள் மலைப் பகுதி ஓடைகளிலிருந்து குழாய்கள் மூலம் தங்களின் வீடுகளுக்கு தண்ணீா் எடுப்பது வழக்கம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை குழாயில் தண்ணீா் வரவில்லையாம். இதையடுத்து, குழாயை சீரமைக்க அப்பகுதியைச் சோ்ந்த குஞ்சுராமன் காணி மகன் மது (40) என்பவரும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த மூவரும் 500 மீட்டா் தொலைவில் உள்ள ஓடைப் பகுதிக்குச் சென்றனராம். அப்போது, அங்கு காட்டு யானை நின்றிருந்ததாம். அதைப் பாா்த்ததும் அனைவரும் திரும்பி ஓடிவர முயற்சித்ததில் மது கால் இடறி கீழே விழுந்தாராம். அவரை யானை தூக்கி வீசி மிதித்துள்ளது. இதில்,அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் தலைமையில் வனத்துறையினரும், ஆறுகாணி போலீஸாரும் அங்கு சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com