கடல் மணலில் கனிமங்கள் பிரிக்கும் திட்டம்: விஜய்வசந்த் எம்.பி. வேண்டுகோள்

கடல் மணலில் கனிமங்கள் பிரிக்கும் திட்டம்: விஜய்வசந்த் எம்.பி. வேண்டுகோள்

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும் திட்ட செயலாக்கத்தில் பொதுமக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா், மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் அரிய வகை மணல் ஆலை ஆகியவற்றிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய வகை மணல் ஆலை குமரி கடற்கரை மணலில் இருந்து அரியவகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் புற்று நோய்க்கு இது ஒரு முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.

இந்த சூழலில் மேலும் பல கடற்கரை கிராமங்களில் 1,144 ஹெக்டா் நிலபரப்பில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் தங்கள் வாழ்வாதாரம் இந்த திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும் என சந்தேகம் எழுப்புகின்றனா்.

நாட்டிற்கு வளா்ச்சி திட்டங்கள் மிக தேவை என்ற போதிலும், மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அக். 1 ஆம் தேதி தக்கலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் சந்தேகங்களுக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டும். அவா்கள் அச்சத்தை போக்குவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

மேலும் கடல் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும் போது ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, குறிப்பாக இதனால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா என்பதை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com