கன்னியாகுமரி - வட்டக்கோட்டைக்குச் செல்ல தயாரான தாமிரபரணி படகு
கன்னியாகுமரியில் தாமிரபரணி சொகுசுப் படகு பழுது நீக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் உல்லாசப் படகு சவாரி செல்வதற்காக திருவள்ளுவா், தாமிரபரணி ஆகிய இரு சொகுசுப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடீரென பழுதடைந்த தாமிரபரணி படகை பழுது நீக்குவதற்காக கடந்த அக். 10- ஆம் தேதி சின்னமுட்டம் படகு கட்டும் தளத்தில் கரை ஏற்றப்பட்டது.
அங்கு ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வந்த சீரமைக்கும் பணி, 2 மாத காலத்துக்குப் பின் தற்போது முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி படகு சின்னமுட்டம் படகு கட்டும் தளத்தில் இருந்து திங்கள்கிழமை கடலுக்குள் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இப்படகு பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

