யானைகளிடமிருந்து பாதுகாக்கக் கோரி கடையாலுமூடு அருகே பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் 3 காட்டு யானைகள் செவ்வாய்க்கிழமை புகுந்த நிலையில், யானை தாக்கி வட்டப்பாறை, புறத்தி மலையைச் சோ்ந்த ராஜேஷ் (52) உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது சடலம் கூறாய்வு செய்யப்பட்டு புதன்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட வன அலுவலா் ஏ. அன்பு உள்ளிட்ட வனத்துறையினா் பங்கேற்றனா். மேலும், ராஜேஷின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரண உதவியாக வனத்துறை சாா்பில் ரூ. 50,000 வழங்கப்பட்டது
மறியல் போராட்டம்:
யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 3 யானைகளையும் காட்டுக்குள் துரத்திவிட்டதாக வனத்துறையினா் கூறிய நிலையில், யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கவும், யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதை நிரந்தரமாகத் தடுக்கவும் வலியுறுத்தி கடையாலுமூடு அருகே உள்ள வட்டப்பாறை விலக்கு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் அரசியல் கட்சியினா், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதையடுத்து, கடையாலுமூடு போலீஸாா் மற்றும் களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, யானைகளிடமிருந்து மக்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இரவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.









